"எங்க அம்மாவையா சீண்டுற.." 70 வயது ஆணை.. அடித்து கொன்று வயலில் வீசிய சிறுமிகள்!
வயநாட்டில் தனது அம்மாவை தொந்தரவு செய்த முதியவரை அடித்துக்கொன்று கிணற்றில் வீசியுள்ளனர் இரண்டு சிறுமிகள்.
வயநாடு: 70 வயது முதியவரை இரண்டு சிறுமிகள் கோடாரியால் அடித்துக்கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீசியுள்ளனர். காவல்நிலையத்தில் சரணடைந்த சிறுமிகள் கொலைக்கான காரணத்தையும் போலீசில் கூறியுள்ளனர்.
கேரளா மாநிலம் வயநாடு அருகே உள்ள அம்பலவாயல் கிராமத்தில் உள்ள வயல் வெளியில் சாக்கு மூட்டை ஒன்று ரத்தக்கறைகளுடன் கிடந்தது. அந்த மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசவே, அச்சமடைந்த கிராம மக்கள் சிலர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் முதியவர் ஒருவரின் உடல் படுகாயங்களுடன் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யார் அந்த முதியவர், அவர் கொலை செய்யப்பட்டது எப்படி என்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 6 இடங்களில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு- 5 பேர் பலி
கொலை செய்யப்பட்ட அந்த முதியவரின் பெயர் முகம்மது கோயா என்றும் 70 வயதான அந்த முதியவர் தனது மனைவியுடன் அம்பலவாயல் அருகே ஆரியம்கொல்லி பகுதியில் வசித்து வந்தவர் என்றும் தெரியவந்தது.
கொலை செய்தது யாராக இருக்கும் என்று காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் தாங்கள்தான் கொலை செய்தோம் என்று கூறி இரண்டு சிறுமிகள் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.
தொடர் சண்டை
பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவிகள் தனது தாயுடன் ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். அதே வீட்டில் ஒரு பகுதியில் முகம்மது கோயாவும் தனது மனைவியுடன் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு முகம்மது கோயா சிறுமிகளின் அம்மாவிடம் சண்டை போட்டு தாக்க முயன்றுள்ளார். அதைப்பார்த்த சிறுமிகள் முதலில் தடுக்க முயன்றனர்.
முதியவர் கொலை
அதையும் மீறி முதியவர் சண்டை போட்டு அடிக்கவே, அருகில் கிடந்த கோடாரியை எடுத்து முதியவரின் தலையில் அடித்துள்ளனர். இதில் முதியவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். முதியவர் மரணமடையவே அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி வயல்வெளியில் வீசியுள்ளனர். காவல்நிலையத்தில் சரணடைந்த சிறுமிகள் இந்த தகவலை போலீசில் தெரிவித்துள்ளனர். வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுமிகளையும் அவர்களின் தாயாரையும் போலீசார் கைது செய்தனர்.
கொலைக்கு காரணம்
முகம்மது கோயாவிற்கு மூன்று மனைவிகள் உள்ளனர். அவர் தனது மூன்றாவது மனைவியுடன் வசித்து வந்தார். அடிக்கடி சிறுமிகளின் தாயாரிடம் சண்டை போடுவாராம். அவரது தொந்தரவு தாங்காமல் சிறுமிகளும் மன உளைச்சலில் இருந்ததாக அம்பலவாயல் பஞ்சாயத்து தலைவர் கூறியுள்ளார். அந்த சிறுமியின் தாயார் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.
பள்ளி சிறுமிகள்
முதியவரால் அதிக தொந்தரவு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அடித்து கொலை செய்து விட்டதாகவும் பஞ்சாயத்து தலைவர் தெரிவித்துள்ளார். அம்மாவை துன்புறுத்திய கிழவரை சிறுமிகள் அடித்துக்கொன்ற சம்பவம் வயநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.