முள்ளை முள்ளால் எடுங்க! இந்துக்களே வன்முறையாளர்களை கல், செங்கல்லால் தாக்குங்க! பாஜக எம்பி சர்ச்சை
போபால்: மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் ராமநவமி வன்முறை தொடர்பாக அந்த தொகுதி பாஜக எம்பி கஜேந்திர பட்டேல் சர்ச்சைகுரிய வகையில் பேசியுள்ளார். அதாவது இந்துக்களுக்கு எதிராக வன்முறையை உருவாக்கி கற்களை வீசுவோர் மீது இரட்டை வேகத்தில் கல், செங்கற்களை வீசி தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் சில மாநிலங்களில் இந்த மாத துவக்கத்தில் ராமநவமி ஊர்வலம் நடந்தது. அப்போது சில இடங்களில் வன்முறை வெடித்தன. இதில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
குறிப்பாக மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியில் ஏப்ரல் 10ல் நடந்த ராமநவமி ஊர்வலத்தில் வன்முறை உருவானது. இருதரப்பின் மோதிக்கொண்டதில் கற்கள் வீசப்பட்டு வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. போலீசார் உள்பட ஏராளமானவர்கள் காயமடைந்தனர்.

பாஜக எம்பி சர்ச்சை
இந்நிலையில் தான் மத்திய பிரேதசம் மாநிலம் கார்கோன் வன்முறை தொடர்பாக அந்த தொகுதியின் பாஜக எம்பி கஜேந்திர பட்டேல் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது: ராமநவமி ஊர்வலத்தில் ராமரை வழிபடுவோர் மீது பூ இதழ்களை தூவி வரவேற்று இருக்க வேண்டும். ஆனால் கற்களை வீசியுள்ளனர். இதனால் அனைத்து இந்து இளைஞர்களுக்கும் ஒரு தீர்மானத்தை எடுங்கள். நம் மீது கற்களை வீசும் நபர்களுக்கு நாமும் உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும். இது இரட்டை வேகத்தில் இருக்க வேண்டும். எனவே கல்வீசும் நபர்களுக்கு கல், செங்கற்களால் நாம் பதில் கூற வேண்டும்.

சமரச அரசு இதுவல்ல
இது இந்திய நாடு. இந்துக்களாக நாம் நமது மதத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். இதனால் இந்துக்கள் மீது மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கல்லெறிந்தால் இரட்டை வேகத்தில் பதிலடி கொடுப்பது அவசியமாகும். இந்த நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் சக்தி வாய்ந்த அரசு உள்ளது. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்து மதம் சார்ந்த விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளும் அரசு இதுவல்ல. அனைத்து மதத்தினரும் தங்கள் பண்டிகைகளை கொண்டாட உரிமை உண்டு. இதை உறுதியாக நான் நம்புகிறேன். அதேநேரத்தில் எந்த மத ஊர்வலத்தின் மீதும் கற்களை வீச யாருக்கும் உரிமை இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.

64 வழக்கு-175 பேர் கைது
முன்னதாக கார்கோனில் ஏப்ரல் 10ல் நடந்த ராமநவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக இதுவரை 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் சேதமடைந்த பொருட்களின் மதிப்புகளை கணக்கிட்டு வசூலிக்கும் நோக்கத்தில் மத்திய பிரதேச அரசு செயல்பட்டு வருகிறது.

வீடு, கடைகள் அகற்றம்
மேலும் கார்கோனின் 5 இடங்களில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறி முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டன. பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவில் புல்டோசர்கள் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இருப்பினும் பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை.












Click it and Unblock the Notifications