சினிமா விழாவிலும் "உம்மா" போராட்டம்.. "கிஸ்" கொடுத்தவர்கள் மீது பாட்டிலை எடுத்து வீசிய மக்கள்!
திருவனந்தபுரம் : கேரளாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் முத்தப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாட்டில்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழா கடந்த 12ஆம் தேதி தொடங்கியுள்ளது. இதற்காக கைரளி, நிலா, ஸ்ரீ, நியூ உட்பட 12 தியேட்டர்களில் ஈரான், பெல்ஜியம், சீனா, துருக்கி உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 140க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதனால் பல நாட்டு சினிமா ரசிகர்கள் திருவனந்தபுரத்தில் குவிந்துள்ளனர்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள கைரளி மற்றும் ஸ்ரீ தியேட்டர்கள் முன்பு கூடிய சுமார் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென முத்தப் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கு கூடியிருந்த மக்கள், தங்கள் கைகளில் இருந்த குடிநீர் பாட்டில்களை முத்தப் போராட்டம் நடத்தியவர்கள் மீது வீசி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதனால் இரு தரப்பினரிடையே இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு, அங்கு மோதல் ஏற்படாமல் தடுத்தனர்.
இந்தச் சம்பவம் காரணமாக சர்வதேச திரைப்பட விழாவில் சில படங்கள் திரையிட இருந்த தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால், அங்கு வந்த சினிமா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications