கொல்லம் கோயில் தீ விபத்து - கேரளா அரசுக்கு ஹைகோர்ட் கடும் கண்டனம்
திருவனந்தபுரம்: கேரளாவில் கோயிலில் பட்டாசு விபத்தில் 112 பேர் உயிரிழந்தது பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார். கோயில் திருவிழாக்களின்போது, இரவு நேரங்களில் சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க ஹைகோர்ட் தடைவிதித்துள்ளது. அப்படியிருக்கும் போது புட்டிங்கால் கோயில் வளாகத்திற்குள் பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்காத நிலையில், எவ்வாறு விபத்து நிகழ்ந்தது என்று கேள்வி எழுப்பியதுடன், கேரள அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கொல்லம் பகுதியில் உள்ள பராவூர் புட்டிங்கால் தேவி கோயில் திருவிழாவில் வாணவேடிக்கையின் போது ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை சுமார் 112 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயில் நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகிகள் 5 பேர் சரணடைந்துள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்பட்ட உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சில உடல்கள் தீயில் கருகி விட்டதால், அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது. மரபணு பரிசோதனை செய்து உடல்களை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடக்கவுள்ளது. வெடி விபத்தை தொடர்ந்து, திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின்போது வெடி மருந்து பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தலைமறைவு ஆன கோவில் அதிகாரிகள் 5 பேர் போலீசில் நேற்று சரண் அடைந்தனர்.
இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு, கேரளா முழுவதும் கோயில் விழாக்களில் வாணவேடிக்கைகள், பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், அனுமதியில்லாமல் எவ்வாறு பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டன என அம்மாநில அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விழாவுக்கு பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்க வில்லையென்று தெரிவித்ததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், கேரளா முழுவதும் இரவு நேரங்களில் வழிபாட்டுத் தலங்களில் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வாண வேடிக்கை நிகழ்ச்சியை தடுக்க போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேட்ட நீதிபதிகள் இவ்விகாரத்தில் தவறு இழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கேரள அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே கேரளாவில் கோவில்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு உம்மன் சாண்டி அழைப்பு விடுத்து உள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி, 14ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்றும் புட்டிங்கல் தேவி கோவிலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு கட்டணம் இல்லாமல் இலவசமாக சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது என்றும் கூறிஉள்ளார்.












Click it and Unblock the Notifications