அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியவர்.. உடுப்பி ஷிரூர் மடாதிபதி ஃபுட் பாய்சனால் மரணம்
உடுப்பி: உடுப்பி அஷ்ட மடங்களின் கோட்பாடுகளுக்கு எதிராக அவ்வப்போது, செயல்பட்டு வந்ததால் செய்திகளில் இடம் பிடித்த, ஷிரூர் மடாதிபதி லக்ஷ்மிவர தீர்த்த சுவாமி, ஃபுட்பாய்சன் பிரச்சினையால் மரணமடைந்தார். அவருக்கு வயது, 55.
உடுப்பி அஷ்ட மடங்கள் புகழ் பெற்றவை. வைணவ பக்தியையும், சம்பிரதாயங்களையும் நிறுவும் நோக்கத்தில் செயல்படும் இந்த அஷ்ட மடங்களும் இணைந்து செயல்பட கூடியவை. அதில் ஒரு மடம்தான், ஷிரூர் மடம். இதன் மடாதிபதியாக இருந்தவர் லக்ஷ்மிவர தீர்த்த சுவாமிஜி (55).
இந்த மடத்தின் 30வது மடாதிபதியான இவர், 1971ம் ஆண்டு, அவருக்கு 8 வயதாக இருந்தபோதே சன்னியாசம் பெற்றவர். ஆனால் சமீப காலங்களாக லக்ஷ்மிவர தீர்த்த சுவாமிஜி அவ்வப்போது செய்திகளில் இடம் பிடித்து வந்தார்.
தேர்தலில் போட்டி
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் உடுப்பி தொகுதியில் இருந்து போட்டியிட விரும்புவதாகவும், பாஜக டிக்கெட் கொடுத்தால் அக்கட்சி சார்பிலும், அல்லது, சுயேச்சையாகவும் போட்டியிட தயார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார், லக்ஷ்மிவர தீர்த்த சுவாமிஜி. மேலும், சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுவையும் தாக்கல் செய்தார். இருப்பினும், அந்த வேட்புமனுவை அவர் வாபஸ் பெற்றுக்கொண்டார்.
வைரலான ஆடியோ
கடந்த மார்ச் மாதம், அஷ்ட மடங்களின் அவசர ஆலோசனை கூட்டம் உடுப்பியில் நடைபெற்றது. அதில் லக்ஷ்மிவர தீர்த்த சுவாமிஜி மீது நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில், தனக்கு குழந்தை இருப்பதாகவும், அதேபோல அஷ்ட மடங்களை சேர்ந்த நிறைய சாமியார்களுக்கு குழந்தைகள் இருப்பதாகவும் லக்ஷ்மிவர தீர்த்த சுவாமிஜி பேசியதை போன்ற ஆடியோ கிளிப்பிங் சில டிவி சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆடியோ மிமிக்ரி செய்யப்பட்டது என்று, லக்ஷ்மிவர தீர்த்த சுவாமிஜி கூறியிருந்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்தையும் அவர் அணுகினார்.
சிலைகளுக்காக கோபம்
சில காலம் முன்பு, லக்ஷ்மிவர தீர்த்த சுவாமிஜிக்கு உடல் நிலை சரியில்லாமல்போனபோது, ஷிரூர் மடத்தில் இருந்த கிருஷ்ணர் சிலைகளை, கிருஷ்ண மடத்தில் உள்ள கருவறையில் வைத்து பாதுகாக்க அளித்திருந்ததாகவும், உடல் நலம் தேறியபிறகு சிலைகளை திருப்பி கேட்டபோது, அஷ்ட மடங்களில் 6 மடங்கள் அவற்றை திருப்பி தர முடியாது என கூறியதாகவும், எனவே அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவிருந்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபுட் பாய்சன்
இதனிடையே ஷிரூர் கிராமத்தில் மரம் நடும் விழாவில் பங்கேற்றபோது, கல்லூரி மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து, லக்ஷ்மிவர தீர்த்த சுவாமிஜி சாப்பிட்டார். அப்போது ஃபுட் பாய்சன் ஆகியதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் சமாதியடைந்தார். இதையடுத்து லக்ஷ்மிவர தீர்த்த சுவாமிஜி உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.