சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசுகளின் பொறுப்பு.. தேசத்தின் ஒற்றுமையுடன் இணைந்தது: பிரதமர் மோடி
சூரஜ்கண்ட்: சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசுகளின் பொறுப்பு; அது நாட்டின் ஒற்றுமையுடன் இணைந்ததாகவும் இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் சூரஜ்கண்ட்டில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு நடைபெற்றது. மாநில உள்துறை அமைச்சர்களுக்கான சிந்தனை முகாம் என்ற பெயரில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.

சட்டம் ஒழுங்கும் மாநிலங்களும்
மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாட்டுக்கு நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். இந்த மாநாட்டின் 2-வது நாளான இன்று பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று பேசியதாவது: சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்பது மாநிலங்களின் பொறுப்பு. அதேநேரத்தில் சட்டம் ஒழுங்கு என்பது தேசத்தின் ஒற்றுமையுடன் ஒருமைப்பாட்டுடன் இணைந்தது.

கூட்டாட்சிக்கு உதாரணம்
தற்போது நாம் நடத்தி வரும் உள்துறை அமைச்சர்களுக்கான சிந்தனை முகாம் கூட்டுறவு கூட்டாட்சிக்கு நல்ல உதாரணமாகும். இந்த சிந்தனை முகாம் மூலமாக மாநிலங்கள் பரஸ்பரம் புரிந்து கொண்டு பல்வேறு வகைகளில் இணைந்து செயல்பட முடியும். சட்டம் ஒழுங்கு என்பது ஒரு மாநிலத்துடன் முடியவடையக் கூடியதாக இல்லை. அது மாநிலங்களுக்கு இடையே, சர்வதேச அளவில் விரிவடைந்துள்ளது.

நவீன தொழில்நுட்பம்
தற்போது நவீன தொழில்நுட்ப உதவியுடன் குற்றச்செயல்களில் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். நமது இந்தியா இப்போது 5 ஜி எனும் புதிய தொழிநுட்ப சகாப்தத்தில் நுழைந்திருக்கிறது. இந்த நவீன காலத்தில் ஒரு சிறிய பொய்செய்தி ஒட்டுமொத்த தேசத்தையே புரட்டிப் போட்டுவிடும் ஆபத்தும் உள்ளது. ஆகையால் எந்த ஒரு மெசேஜ்ஜை பார்வார்டு செய்யும் முன் நன்கு ஆராய வேண்டும் .

நக்சலிசம் அழிப்போம்
சைபர் கிரைம் மற்றும் டிரோன்கள் மூலம் ஆயுத சப்ளை என நவீன தொழில்நுட்பத்துடன் சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் ஈடுபடுகின்றனர். இத்தகைய குற்றச் செயல்களை தடுக்க நாமும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக அனைத்து வகை பயங்கரவாத நெட்வொர்க்குகளையும் அனைத்து அரசுகளும் பொறுப்புடன் நிர்மூலமாக்கின. நக்சலிசத்தின் அத்தனை வடிவங்களையும் நாம் தோற்கடிக்க வேண்டும். அத்தனைக்கும் நாம் தீர்வு காண வேண்டியதும் அவசியம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications