பெங்களூரில் வரும் 25ம் தேதி வரை மதுக்கடைகள் மூடல்.. காவல்துறை அறிவிப்பு!
பெங்களூர்: காவிரி விவகாரம் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரில் மதுக்கடைகள் கடந்த இரு தினங்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் மீண்டும் வரும் 25 ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திற்கு காவிரியில் மேலும் தண்ணீர் திறக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. தமிழகத்துக்கு காவிரியில் இன்று முதல் 27-ந் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்துக்குள் அமைக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஏற்கனவே நடந்த வன்முறையில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பேருந்துகளும் தீவைத்து கொளுத்தப்பட்டன. இதனால் பாதுகாப்பு கருதி அசம்பாவி சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக மதுக்கடைகள் மூடப்படுகின்றன. வரும் 25 ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக நேற்று காலை 6 மணி முதல் இன்று நள்ளிரவு 1 மணி வரை இரண்டு நாட்களுக்கு மதுக்கடைகளை மூட காவல் துறை உத்தரவிட்டது. இந்நிலையில் மேலும் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.