கையில் இருப்பது எல்லாம் வெறு ரூ.100 தான்: இப்படியும் ஒரு வேட்பாளர்
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே டெல்லி தொகுதி வேட்பாளரான ராமானுஜன் பட்டேல் தான் மிகவும் ஏழை ஆவார். அவரிடம் கையிருப்பு உள்ள பணம் ரூ.100 மட்டுமே.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்கள் தங்களின் சொத்து விவரங்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
இந்நிலையில் டெல்லி தொகுதியில் போட்டியிடும் பத்திரிக்கையாளரான ராமானுஜன் பட்டேல்(37) தன்னிடம் வெறும் ரூ.100 இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
என்னிடம் வங்கிக் கணக்கு இல்லை. ஆனால் தேர்தலில் போட்டியிட வங்கியில் கணக்கு துவங்க வேண்டுமாம். வேட்புமனு தாக்கல் செய்ய எனது வங்கி விவரங்கள் வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு துவங்க ரூ.1,000 வேண்டுமாம். ஆனால் என்னிடம் ரூ.100 தான் உள்ளது என்றார். அவர் கடன் வாங்கி வங்கியில் கணக்கு துவங்கியுள்ளார்.
தேர்தலில் போட்டியிட செலுத்த வேண்டிய ரூ.25 ஆயிரம் டெபாசிட் பணத்தை தனக்கு 16 பேர் அளித்ததாக பட்டேல் தெரிவித்தார். சம்யக் பரிவர்தன் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் அவர் கிழக்கு டெல்லியில் உள்ள ஷகார்பூரில் 2 அறைகள் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவருடைய அலுவலகமும் அது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டேல் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கென், ஆம் ஆத்மி கட்சியின் ஆசிஷ் கைதான் மற்றும் பாஜகவின் மீனாக்ஷி லெகி ஆகியோரை எதிர்த்து டெல்லியில் போட்டியிடுகிறார்.