லோக்சபா தேர்தல்: மதுவிற்பனையே இல்லாத குஜராத்தில் மிக அதிகளவு மதுபானம் பறிமுதல்!!
டெல்லி: லோக்சபா தேர்தலின் போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மதுபானங்கள் நாட்டிலேயே ஆந்திராவைத் அடுத்து "பூரண மதுவிலக்கு நடைமுறையில் இருக்கும்" குஜராத் மாநிலத்தில்தான் அதிகளவு கைப்பற்றப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் மதுபானங்களை கொடுப்பதற்காக கடத்திச் செல்லப்படுவதை தடுக்க நாடு முழுவதும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சோதனைகளின் போது ஆந்திர, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து பெருமளவு பணமும் மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆந்திராதான் டாப்
நாட்டிலேயே ஆந்திராவில் மிக அதிக அளவாக 77 லட்சம் லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குஜராத்துக்கு 2வது இடம்
இதற்கு அடுத்த இடம் பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத் மற்றும் அதையொட்டி டாமன் டையூவில்தானாம். இங்கு இதுவரை 23 லட்சம் லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டாமன் டையூ, யூனியன் பிரதேசம் என்பதால் அங்கிருந்து வழக்கமாக பெருமளவு மதுபானங்கள் குஜராத்துக்கு கடத்திவரப்படுவது வழக்கம். இம்முறை தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் அம்பலமாகியிருக்கிறது.
3வது இடத்தில் பஞ்சாப்
இவற்றுக்கு எடுத்ததாக பஞ்சாபில் 6.22 லட்சம் லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மதுபானத்தை கடத்துவதற்கான லகான் பவுடர் 1.23 லட்சம் கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ725 கோடி மதிப்பிலான 145 கிலோ ஹெராயினும் பஞ்சாபில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பணம் பறிமுதலில் ஆந்திரா நெ.1
பணம் பறிமுதலிலும் ஆந்திராவே முதலிடம் வகிக்கிறது. இங்கு ரூ109.2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு 3வது இடம்
கர்நாடகாவில் ரூ28.08 கோடியும் தமிழகத்தில் ரூ24.23 கோடியும் உ.பி.யில் ரூ15.89 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.