சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை- டிச. 31 முதல் பக்தர்கள் மீண்டும் அனுமதி!
பம்பை: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை நடைபெறுகிறது. முன்னதாக சுவாமி ஐயப்பனுக்கு நேற்று தங்க அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்றைய மண்டல பூஜையைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு ஐயப்பன் கோவில் மூடப்பட்டு டிசம்பர் 31-ந் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. மண்டலபூஜை இன்று நடைபெறுவதை முன்னிட்டு தங்க அங்கி கடந்த 22-ந்தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து பல்லக்கு வாகனத்தில் சபரிமலைக்கு புறப்பட்டது.
தங்க அங்கி ஊர்வலம்
தங்க அங்கி பல்லக்கு தென்காசி, செங்கோட்டை வழியாக நேற்று சனிக்கிழமை பிற்பகல் பம்பை கணபதி கோவிலை வந்தடைந்தது. அங்கிருந்து தலைச்சுமையாக மலைப்பாதையில் தங்க அங்கி சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஐயப்பனுக்கு தங்க அங்கி
ஐயப்பன் கோவில் சன்னதியை வந்தடைந்த தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் 18-ம் படியின் கீழே தங்க அங்கியை பெற்றுக் கொண்டு படிகள் வழியே சன்னிதானத்துக்குள் கொண்டு சென்றனர். இதையடுத்து ஐயப்பனுக்கு தங்கி அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடத்தப்பட்டது. இதன்பின்னர் வழக்கம் போல இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது.
இன்று மண்டல பூஜை
இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. முற்பகல் 11 மணிக்கு களபாபிஷேகம் நடைபெறும். பின்னர் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜைகள் சுமார் 1 மணிநேரம் நடைபெறும். மண்டல பூஜைகள் முடிவடைந்த பின்னர் நடை சாத்தப்பட்டு மாலை 4 மணிக்கு திறக்கப்படும். இன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை மூடப்பட்ட பின்னர் வரும் 30-ந் தேதி மகர விளக்கு பூஜைக்காக கோவில் திறக்கப்படும்.
மகர விளக்கு பூஜை
டிசம்பர் 31-ந் தேதி முதல் பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைகள், மகர ஜோதி தரிசனம் ஆகியவை ஜனவரி 14-ந் தேதி நடைபெறும். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ள பக்தர்கள் மட்டுமே ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.