இறுதி கட்ட தேர்தல்: மே.வங்கம்- 71%, உ.பி.- 51%, பீகார்- 58% வாக்குகள் பதிவு
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்கு பதிவு பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளில் இன்று நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் 71%, பீகாரில் 58%, உத்தரப்பிரதேசத்தில் 51% வாக்குகள் பதிவாகின.
லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 7ந் தேதி தொடங்கி மே 12ந் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 7ந் தேதி நடைபெற்றது. இதில் அஸ்ஸாமில் 5 தொகுதிகளுக்கும், திரிபுராவில் ஒரு தொகுதிக்கும் வாக்கு பதிவு நடைபெற்றது.
2ம் கட்ட தேர்தல்
ஏப்ரல் 9ந் தேதி நடந்தது. இதில் 7 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடந்தது. 3வது கட்டமாக ஏப்ரல் 10ந் தேதி நடந்த தேர்தலில் 91 தொகுதிகளுக்கும், 12ந் தேதி நடந்த 4ம் கட்ட தேர்தலில் 7 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு நடைபெற்றது.
5வது கட்டமாக 121 தொகுதிகளில்..
5வது கட்ட தேர்தல் ஏப்ரல் 17ம் தேதி நடைபெற்றது. இதில் 121 தொகுதிகளில் வாக்கு பதிவு நடந்தது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக
கடந்த மாதம் 24ந் தேதி நடந்த 6வது கட்ட தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 117 தொகுதிகளுக்கு வாக்குபதிவு நடைபெற்றது.
7வது கட்டமாக 89 தொகுதிகளில்..
ஏப்ரல் 30ந் தேதி நடந்த 7வது கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு நடைபெற்றது.
8வது கட்டமாக 64 தொகுதிகளில்..
எட்டாவது கட்டமாக ராகுல் போட்டியிட்ட அமேதி தொகுதி உள்பட 64 தொகுதிகளுக்கு கடந்த 7ந் தேதி வாக்கு பதிவு நடந்து முடிந்தது
இறுதி கட்ட வாக்குப் பதிவு
கடைசி கட்டமாக உத்தர பிரதேசத்தில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்பட 41 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு பதிவு நடைபெற்றது.
மோடி- கேஜ்ரிவால்
இன்றைய வாக்குப் பதிவு நடைபெற்ற வாரணாசி தொகுதியில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியும் அவரை எதிர்த்து ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலும் களம் கண்டனர்.
3 மாநிலங்களில் 41 தொகுதிகள்...
பீகாரில் 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 18, மேற்கு வங்கத்தில் 17 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
606 வேட்பாளர்கள்
இறுதிகட்டத் தேர்தல் நடைபெற்ற 41 தொகுதிகளிலும் மொத்தம் 606 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இங்கு மொத்தம் 6 கோடி பேர் வாக்காளர்கள்..
வாக்குப் பதிவு
இன்று மேற்கு வங்கத்தில் 71%, பீகாரில் 58%, உத்தரப்பிரதேசத்தில் 51% வாக்குகள் பதிவாகின.