4 வருஷம் ஆச்சு.. டீ பாக்கி தர மாட்டீங்களா! டீக்கடைகாரர் கேட்ட கேள்வி.. மிரண்ட முன்னாள் பாஜக அமைச்சர்
இந்தூர்: முன்னாள் பாஜக அமைச்சர் காரில் சென்று கொண்டிருந்த போது நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இப்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சிவராஜ் சிங் சவுகான் இப்போது முதல்வராக உள்ளார்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்ற போதிலும், சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் கடந்த 2020ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.
உச்சக்கட்ட மோதல்.. தெலங்கானாவில் பாஜக எம்பி வீட்டை நொறுக்கிய டிஆர்எஸ் கட்சியினர்.. ஒரே பதற்றம்
மத்தியப் பிரதேசம்
அப்போது முதல் அங்கு பாஜக அரசு தான் ஆட்சியில் உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு அடுத்தாண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்கள் உடன் இணைந்து தேர்தல் நடக்க உள்ளது. இதற்கிடையே இப்போது அங்கு நடந்துள்ள ஒரு சம்பவம் பாஜகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.. இதற்கு என்ன விளக்கம் கொடுப்பது என்று தெரியாத அளவுக்கு இந்த விவகாரம் இருக்கிறது.
பாஜக
மத்தியப் பிரதேச முன்னாள் அமைச்சரும் இப்போது எம்எல்ஏவாக இருப்பவருமான கரண் சிங் வர்மா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது காரை வழி மறித்து டீக்கடைக்காரர் ஒருவர் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் டீ கட்டண நிலுவைத் தொகையைத் தரும்படி கேட்டு இருக்கிறார். மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் உள்ள இச்சாவார் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
டீ பாக்கி
இப்படியே டீயை குடித்துவிட்டு பில் செலுத்தாமல் ரூ.30,000 பாக்கி இருப்பதாகவும் அதை உடனடியாக செலுத்துங்கள் என்று அந்த டீக்கடைக்காரர் காரை வழிமறித்துக் கேட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அங்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் நிலையில், அதையொட்டியே மக்களைச் சந்திக்கக் கரண் சிங் வர்மா தனது தொகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது தான் இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது.
முதல்வரின் சொந்த மாவட்டம்
இது மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் சொந்த மாவட்டமும் ஆகும். இதில் என்ன விஷயம் என்றால் கரண் சிங் வர்மா அப்பகுதியின் எம்எல்ஏ மட்டுமில்லை. ஒரு முன்னாள் அமைச்சரும் ஆவார். அதுவும் மாநிலத்தின் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவர். அவரே டீ பில்லை கூட செலுத்தாத சம்பவம் பாஜகவுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வீடியோ
இணையத்தில் வேகமாகப் பரவும் அந்த வீடியோவில் 2018 சட்டசபை தேர்தல் சமயத்தில் டீ சப்ளை செய்தவருக்கு இன்னும் பணம் தரவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டுகிறது. இதை எம்எல்ஏ கரண் சிங் வர்மா மறுக்கவில்லை. டீக்கடைக்காரருக்கு கொஞ்சம் நிலுவைத் தொகை இருப்பது உண்மை தான் என்று பாஜக முன்னாள் அமைச்சர் கூறுவதும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது.
தர்மசங்கடம்
மத்தியப் பிரதேசத்தில் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்குக் குறைவாகவே உள்ள நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சட்டசபை தேர்தலிலேயே பாஜகவால் வெல்ல முடியவில்லை. இப்போது அம்மாநில முதல்வரின் தொகுதியிலேயே இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எடுத்துக் கொண்டு அரசியல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.