மகசேசே விருதுடன் வந்த பணத்தை அப்படியே எய்ம்ஸில் உள்ள ஏழை நோயாளிகளிக்கு அளித்த ஐஎப்எஸ் அதிகாரி
டெல்லி: ரமோன் மகசேசே விருது பெற்ற எய்ம்ஸின் துணை செயலாளர் சஞ்சீவ் சதுர்வேதி பரிசுத் தொகை முழுவதையும் எய்ம்ஸில் சிகிச்சை பெற்று வரும் ஏழை நோயாளிகளுக்கு அளித்துள்ளார்.
எய்ம்ஸின் முதன்மை ஊழல் தடுப்பு அதிகாரியாக இருந்த சஞ்சீவ் சதுர்வேதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எய்ம்ஸில் நடக்கும் ஊழல்களை கண்டுபிடித்ததால் தன்னை அந்த பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். 2002ம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த ஐஎப்எஸ் அதிகாரியான சஞ்சீவ் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 12 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஹரியானாவில் பணியாற்றியபோது நில மாபியாவை எதிர்த்து போராடினார். இந்நிலையில் அரசு அதிகாரியான அவரின் நேர்மை, துணிச்சல், நியாயத்திற்காக போராடும் குணத்தை பாராட்டி ஆசியாவின் நோபல் எனப்படும் ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது. விருதுடன் தனக்கு கிடைத்த ரூ.19.85 லட்சத்தை எய்ம்ஸில் சிகிச்சை பெற்று வரும் ஏழை நோயாளிகள் அதிலும் குறிப்பாக புற்றுநோயால் அவதிப்படுவோருக்கு அளித்துள்ளார் சஞ்சீவ்.
இந்நிலையில் அவர் எய்ம்ஸ் டைரக்டருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
எனக்கு மகசேசே விருதுடன் அளிக்கப்பட்ட ரூ.19.85 லட்சத்தை எய்ம்ஸில் சிகிச்சை பெற்று வரும் ஏழை நோயாளிகளுக்கு அளித்துவிடுங்கள். யார், யாருக்கு எவ்வளவு பணம் அளிக்கப்படுகிறது என்பதை தனியாக ஒரு ஏட்டில் பதிவு செய்து வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் பணம் சரியான முறையில் செலவு செய்யப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications