ரூ13,000 கோடி கருப்பு பணத்தை பதுக்கிய குஜராத் மகேஷ் ஷா குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
ரூ13,000 கோடி கருப்பு பணத்தை பதுக்கிய மகேஷ் ஷா குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்: அரசியல்வாதிகளின் ரூ13,000 கோடி கருப்பு பணத்தை பதுக்கி வைத்ததால் கைது செய்யப்பட்ட குஜராத் ரியல் எஸ்டேட் அதிபர் மகேஷ் ஷாவின் குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக தானாக முன்வந்து செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வருமானத்தை காட்டும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து குஜராத் ரியல் எஸ்டேட் அதிபர் மகேஷ் ஷா ரூ13,000 கோடிக்கு வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தார். இதையடுத்து அவருக்கு 45% வரி விதித்து முதல் தவணையாக ரூ.1,560 கோடி கட்ட உத்தரவிட்டது வருமானவரித்துறை.
கைது செய்ய நடவடிக்கை
பின்னர் கருப்பு பண ஆசாமிகளின் ஏஜெண்ட்டாக மகேஷ் ஷா செயல்படுவதாக சந்தேகம் எழுந்ததால் அவர் தாக்கல் செய்த கணக்கை வருமான வரித்துறை ரத்து செய்தது. அத்துடன் அவரை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டது.
டிவியில் பேட்டி
ஆனால் மகேஷ் ஷா தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் குஜராத் டிவி சேனல் ஒன்றுக்கு மகேஷ் ஷா பேட்டியளித்தார். அப்பேட்டியில், தம்மை அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் பயன்படுத்திக் கொண்டனர். என்னுடைய எதிர்காலம் குறித்து அச்சமாக இருக்கிறது. என் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
அதிரடி கைது
அப்பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோதே வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளூர் போலீசார் உதவியுடன் மகேஷ் ஷாவை கைது செய்தனர். தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அம்பலமாகும் உன்மைகள்
இந்த விசாரணையில் மகேஷ் ஷாவுடன் தொடர்பில் இருந்த கருப்பு பண முதலைகளின் பெயர்கள் அம்பலமாகக் கூடும். மேலும் மகேஷ் ஷாவின் குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.