பெங்களூரு பாஜக அலுவலகம் குண்டுவெடிப்பு வழக்கு: நெல்லையைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி கைது
பெங்களூரு: பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றாவாளியான நெல்லையைச் சேர்ந்த டேனியல் பிரகாஷ் என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்தது. இதில் 16 பேர் காயம் அடைந்தனர். விசாரணையில் பாஜக அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த பைக்கில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த பைக்கை வைத்தே விசாரணையை துவங்கினர்.

இந்த குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையை கர்நாடக போலீசார், தமிழக போலீசார் மற்றும் மத்திய உளவுப் பிரிவினர், தேசிய புலனாய்வுப் பிரிவினர் இணைந்து நடத்தி வருகின்றனர். பைக் தமிழ்நாடு பதிவு எண் கொண்டதால் தமிழகத்திற்கு வந்தும் விசாரணை நடத்தினர்.
வேலூரில் உள்ள ஒரு மெக்கானிக்கிடம் நடத்திய விசாரணையில் அவர் சிலரின் பெயரை தெரிவித்தார். மேலும் செல்போன் உரையாடல்கள், எஸ்எம்எஸ்களின் அடிப்படையிலும் பலரை பெங்களூரு, தமிழக போலீசாரும், மத்திய உளவுப் பிரிவினரும் கண்காணித்தனர்.
அதன் அடிப்படையில் பெங்களூரு தனிப்படை போலீசார் சென்னை போலீசாரின் உதவியுடன் பீர் முகமது மற்றும் பஷீர் ஆகிய 2 பேரை சென்னையில் கைது செய்தனர். இதையடுத்து அல் உம்மா இயக்க ஆதரவாளரான நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த கிச்சன் புகாரி தமிழக சிறப்பு புலனாய்வுப் பிரிவு மற்றும் பெங்களூரு தனிப்படை போலீசாரால் மதுரையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பெங்களுர் குண்டுவெடிப்பு வழக்கில் கிச்சன் புகாரி தான் முக்கிய குற்றவாளி என்று கர்நாடக போலீசார் அளித்த தகவலின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கின் மற்றொரு முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட நெல்லை மாவட்டம் புதுக்குடியைச் சேர்ந்த டேனியல் பிரகாஷை பெங்களூரு போலீசார் இன்று கைது செய்தனர். விசாரணையில் டேனியல் தான் குண்டு தயாரித்து கொடுத்தாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications