மே.வங்கத்தில் 6 கட்ட சட்டசபைத் தேர்தல்... மம்தா பானர்ஜி கடும் அதிருப்தி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் என 5 மாநில சட்டசபைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்திற்கு ஆறு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்றும், அதில் முதல்கட்ட தேர்தலின்போது, 2 கட்டமாக வாக்கு பதிவு நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்தார்.
ஆனால், இவ்வாறு மேற்கு வங்கத்திற்கு ஆறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் மம்தா.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, ‘அசாமில் கூட இரண்டு கட்டங்களாகவே தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் 6 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது' என தனது அதிருப்தியைப் பதிவு செய்தார்.
மேலும், கேரளாவில் எதிரெதிர் கட்சிகளாக களமிறங்கும் காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மேற்கு வங்கத்தில் ஒன்றாக கை கோர்த்திருப்பதில் லாஜிக் ஏதும் இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.