சிபிஐ-யின் அதிகார வரம்புதான் என்ன.. கொலகத்தாவில் அத்துமீறியதா சிபிஐ?
Recommended Video
சென்னை: ஒரு பெருநகரத்தின் போலீஸ் கமிஷனரை ஜஸ்ட் லைக் தட் விசாரிக்கும் அளவுக்கு, சிபிஐக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறதா என்ன என்ற கேள்விய எழுப்பி விட்டது கொல்கத்தா சம்பவம்.
ஒரு பெரிய கொலைவழக்கா, ஒரு பெருங்குற்றமா அழையுங்கள் சி பி ஐ- யை என்றிருந்த காலங்கள் எல்லாம் மலையேறிப் போய்விட்டது. அந்த அளவுக்கு சி பி ஐ மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். சி பி ஐ - அமைப்பை மத்திய அரசு தனது கைப்பாவையாக செயல்படுத்துகிறது என்பதே, மாநில அரசுகள் மற்றும் மக்களின் தீர்மானமான அபிப்பிராயம். இதையே நீதிமன்றங்களும் கூறியதுண்டு. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் சி பி ஐ அதிகாரிகளுக்கும் மாநில காவல்துறைக்கும் பிரச்சனை எழுந்து மாநில காவல்துறைக்கு ஆதரவாக அந்த மாநில முதல்வர் மம்தாவே களத்தில் இறங்கி தர்ணாப் போராட்டம் நடத்திவருகிறார்.
இந்த நிலையில் சி பி ஐ -ன் அதிகார வரம்புகள் என்ன என்பது குறித்து இந்நேரம் கேள்வி எழுவது இயல்பானது. 1963 -ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சி பி ஐ -க்கு டெல்லி சிறப்பு காவல் சட்டம் 1964 - பிரிவு 6 -ன் படி அதிகார வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வரும் துறைகளின் அதிகாரிகளையோ அல்லது துறை ரீதியாக விசாரணை நடத்தவோ எந்தவித அனுமதியும் பெற தேவையில்லை. அதே வேளையில் ஒரு மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்ட அதிகாரியை அல்லது துறை ரீதியாக விசாரணை நடத்த வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் முறையான அனுமதியைப் பெற்ற பிறகுதான் விசாரிக்க முடியும். டெல்லியைத் தவிர இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இது பொருந்தும்.
மாநிலங்களை, தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அல்லது அங்கு தனது அதிகாரத்தை நிலைநாட்ட விரும்பும்போது மத்திய அரசு அத்து மீறி சி பி ஐ அமைப்பை தனது கைப்பாவையாக பயன்படுத்துகிறது என்ற குற்றசாட்டு காலம்காலமாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சி பி ஐ அமைப்பையே தங்களது மாநிலத்தில் தடை செய்த அரசுகளும் உண்டு. கர்நாடக மாநிலத்தில் கடந்த 1998 -ம் ஆண்டு ஜனதா தளம் ஆட்சியின் போது ஜே.எச். பாட்டீல் சி பி ஐ க்கு அனுமதி அளிக்கும் பொது ஒப்புதலை வாபஸ் பெற்றார். இந்த தடை தொடர்ந்து 8 ஆண்டுகள் வரை அதாவது காங்கிரஸ் ஆட்சியிலும் நீடித்து வந்தது. 1998- க்குப் பிறகு ஒவ்வொரு வழக்கிலும் மாநில அரசின் அனுமதி பெற்றே சி பி ஐ வழக்குப் பதிவு செய்து வந்தது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருந்தார்.
இதே போல கடந்த வருடம் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் மத்திய அரசின் அத்துமீறலை கட்டுப்படுத்த தங்களது மாநிலங்களில் சி பி ஐ அமைப்புக்கு தங்களது மாநிலத்தில் எவ்வித அனுமதியும் வழங்கவில்லை. இந்த அனுமதி மறுப்பு காரணமாக மாநில அரசு அதிகாரிகளையோ அல்லது அமைச்சர்களையோ விசாரிக்க சி பி ஐ அமைப்புக்கு அனுமதி கிடையாது. சிக்கிம், சட்டீஸ்கர், நாகலாந்து மாநிலங்களும் இதுபோன்று சி பி ஐ அமைப்புக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடதக்கது.
தற்போது மேற்கு வாங்க மாநிலத்தில் சாரதா சிட்பண்ட்ஸ், ரோஸ்வேலி ஆகிய நிறுவனங்கள் பொதுமக்களின் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டன என்பது வழக்கு. இந்த வழக்கை தற்போது மேற்கு வாங்க காவல்துறை ஆணையராக இருக்கும் ராஜீவ்குமார் என்ற ஐ பி எஸ் அதிகாரி விசாரித்து வந்தார். அவர் இந்த வழக்கை நீர்த்துப் போக செய்தார் என்ற குற்றசாட்டு எழுந்தது. இந்த வழக்கைத்தான் இப்போது சி பி ஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்கு ஆஜராக கூறி ராஜீவ் குமாருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்பது சி பி ஐ கூறும் குற்றசாட்டு. ஆனால் அந்த மாநிலத்தில் அரசின் அனுமதியே இல்லாமல் சி பி ஐ எப்படி சம்மன் அனுப்பியது என்பது இப்போது உள்ள கேள்வி?
அதோடு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை வரவிருக்கிறது. ஏற்கனவே மாநிலங்கள் தடைவிதித்த நிகழ்வுகள் இருக்கும்போது உச்ச நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பை வழங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிறியுள்ளது.