செவ்வாய்கிரகத்தை நெருங்கும் மங்கல்யான்: 70 சதவீத தூரத்தை கடந்தது
பெங்களூரு: மங்கல்யான் விண்கலம் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. விண்வெளியில் 70 சதவிகித தூரத்தைக் கடந்து செவ்வாய்கிரகத்தை அது நெருங்கிவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு நவம்பர் 5-ந்தேதி செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக மங்கள்யான் என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தினார்கள்.
கடந்த 7 மாதங்களாக மங்கள்யான் விண்கலம் விண்ணில் பறந்து செவ்வாய்க்கிரகம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
70 சதவிகித தூரம்
பூமியில் இருந்து செவ்வாய் அருகில் மங்கள்யான் செல்வதற்கான மொத்த தூரம் 680 மில்லியன் கிலோ மீட்டர் தூரமாகும். இதில் தற்போது 460 மில்லியன் கிலோ மீடடர் தூரத்தை அதாவது 70 சதவீத தூரத்தை மங்கள்யான் கடந்து விட்டது.
என்ஜின்கள் இயக்கம்
இந்த நிலையில் மங்கள்யான் பயணத்தில் நேற்று ஒரு முக்கியமான பணி நிகழ்த்தப்பட்டது. நேற்று மங்கள்யானில் உள்ள 4 என்ஜின்கள் இயக்கி வைக்கப்பட்டன.16 வினாடிகளில் இந்த பணி செய்து முடிக்கப்பட்டது.
சவாலான பணி
இது மிகவும் சவாலான பணியாகும். இதை நேற்று இந்திய விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் மிகவும் திட்டமிட்டப்படி செய்து முடித்தனர்.
வேகம் அதிகரிப்பு
நேற்று 4 புதிய என்ஜின்கள் இயக்கப்பட்டதால் மங்கள்யானின் வேகம் அதிகரித்துள்ளது. அதன்படி வினாடிக்கு 29 கி.மீ. வேகத்தில் மங்கள்யான் செவ்வாய்கிரகம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
செவ்வாயை நோக்கி
செவ்வாய் கிரகத்தை மங்கல்யான் எட்டுவதற்கு இன்னும் 30 சதவீத தூரமே பாக்கியுள்ளது. இந்த தூரத்தையும் கடந்து வரும் செப்டம்பர் மாதம் 24-ந்தேதி மங்கள்யான் செவ்வாய் கிரகம் அருகில் சென்று சேரும்.
நிலை நிறுத்தும்
செவ்வாய் கிரகத்தை நெருங்கியதும் மங்கள்யான் விண்கலத்தை சுற்றுப் பாதையில் நிலை நிறுத்துவதுதான் இந்திய விஞ்ஞானிகளுக்கு மிகப்பெறும் சவாலாக இருக்கும்.
செவ்வாயில் இந்தியா
இதிலும் இந்தியா வெற்றி பெற்று விட்டால் செவ்வாய்கிரகத்தை வெற்றிகரமாக ஆய்வு செய்யும் 3-வது நாடு என்ற சிறப்பை இந்தியா பெறும் என்பது உறுதி.