இம்பாலிலும் ஒரு "கூவத்தூர்"... பாஜக ஆதரவு எம்எல்ஏ-க்கள் காட்டில் செம மழை!.
மணிப்பூர் மாநில சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் சசிகலா பாணியில் பாஜக ஆதரவு எம்எல்ஏ-க்கள் இம்பாலில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளதால் நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பாஜக ஆதரவு எம்எல்ஏ-க்கள் இம்பாலில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின. அதில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும், பாஜக 21 இடங்களிலும், உதிரிக் கட்சிகள் 2 அல்லது 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
60 தொகுதிகளைக் கொண்ட சட்டசபையில் எந்த ஒரு கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க 31 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை என்பதால் உதிரிக்கட்சிகளை தங்கள் வசம் இழுக்க இருகட்சிகளும் போட்டா போட்டியில் ஈடுபட்டன.
பாஜக வெற்றி
இந்நிலையில் நாகா மக்கள் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏ-க்கள், நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த 4 எம்எல்ஏ-க்கள், லோக்ஜனசக்தி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆகியவற்றை சேர்ந்த 2 எம்எல்ஏ-க்கள் பாஜக ஆதரவு அளிப்பதாக தெரிவித்தன.
உரிமை கோரிய பாஜக
தங்கள் கட்சி எம்எல்ஏ-க்கள் 21 பேருடன், உதிரி கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் 10 பேரின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவிடம் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரியது.
பதவியேற்பு
அதன்படி, மணிப்பூர் முதல்வராக பிரன் சிங் கடந்த 2 நாள்களுக்கு முன்னர் பதவியேற்றுக் கொண்டார். அக்கட்சி வரும் 22 அல்லது 23 -ஆம் தேதி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டார்.
இம்பாலில் ஒரு கூவத்தூர்
தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை 122 எம்எல்ஏ-க்களை கூவத்தூரில் உள்ள விடுதியில் அடைத்து வைக்கப்பட்டதை போல் வரும் 22-ஆம் தேதி மணிப்பூர் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை பாஜக ஆதரவு எம்எல்ஏ-க்கள் இம்பாலில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு எம்எல்ஏ தப்பினாலும்...
கூண்டில் இருந்து ஒரு எம்எல்ஏ தப்பினாலும் பாஜக ஆட்சி கவிழ்க்கப்படும் என்பதால் யாரும் வெளியேறி விடாத வகையில் பாதுகாப்புடன் கண்காணித்து வருகின்றனராம். கூவத்தூர் ரிசார்ட்டை அதிமுக எம்எல்ஏ-க்கள் நாறடித்தது போல் மணிப்பூர் எம்எல்ஏ-க்களும் நாறடிப்பார்களா அல்லது தூய்மை இந்தியா திட்டத்தை கடைப்பிடிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.