மன்மோகன்சிங்கை தாக்கும் மற்றொரு புத்தகம்- அதிகாரம் இல்லா பிரதமர் என விமர்சனம்!!
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அதிகாரம் மிகவும் குறைவுதான் என்று முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் பி.சி.பரேக் தாம் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகராக சஞ்ஜய பாரு ஒரு புத்தகம் எழுதி இருந்தார். அதில் மன்மோகன்சிங் எப்படியெல்லாம் ஒரு பொம்மை பிரதமராக மட்டும் இருந்தார் என்றெல்லாம் எழுதப் போய் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நிலக்கரி துறை செயலராக இருந்த 68 வயதான பி.சி.பரேக்கும் ‘‘சிலுவை சுமந்தவரா, சதிகாரரா? நிலக்கரி சுரங்க ஊழலும், பிற உண்மைகளும்' என்ற புத்தகத்தை வெளியிட்டு மன்மோகன்சிங்கை விமர்சித்திருக்கிறார்.
பி.சி. பரேக் கடந்த 2005ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். பிரதமர் மன்மோகன் சிங்குடன் பணியாற்றியது குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அதில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் பரேக் கூறி இருப்பதாவது:
பிரதமர் மன்மோகன் சிங் ஒருவேளை பதவியை ராஜினாமா செய்திருந்தால் நாட்டுக்கு நல்ல பிரதமர் கிடைத்திருப்பாரா என்று எனக்குத் தெரியாது.
அவருக்கு அதிகாரம் குறைவாக இருந்ததால்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு ஆகியவற்றால் அவரது அந்தஸ்து சீர்குலைந்தது.
ஹிண்டால்கோ நிறுவனத்தின் தலைவர் ஆதித்ய பிர்லா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
அத்துடன் உச்சநீதிமன்றத்தின் கவர்வதற்காகத்தான் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா, இந்த வழக்கில் என் பெயரைச் சேர்த்தார். இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்தான் முடிவு எடுத்தார் என்கிறபோது, வழக்கில் அவர் பெயரை சேர்க்காதது ஏன்? சி.பி.ஐ. பில்லி சூன்யத்தில் ஈடுபட்டுள்ளது என்றும் சாடியுள்ளார்.