"பொங்கல் விளையாட்டு" என்ற பெயரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம்: மார்கண்டேய கட்ஜு யோசனை !
டெல்லி: பொங்கல் விளையாட்டு என்ற பெயரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு புதிய யோசனை தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்து மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விலங்கு நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இடைக்கால தடை விதித்ததோடு, மத்திய, மாநில அரசு உள்ளிட்ட தரப்புகள் 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பரபரப்பான மாற்று யோசனையைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது முகநூலில் பதிவிட்டுள்ளது: ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது குறித்து தமிழர்கள் கவலைப்பட தேவையில்லை. பிரச்சினை வரும்போது காஷ்மீர் பண்டிட்கள் போல் செயல்படலாம். தமிழக அரசே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தான் தடை விதித்தது .அதனால் இவ்விளையாட்டுக்கு பெயரை மட்டும் மாற்றுங்கள் போதும். ‘பொங்கல் விளையாட்டு' என்று பெயர் மாற்றி தொடர்ந்து விளையாடுங்கள், அதற்கு எந்த தடையும் இல்லை என்று மார்கண்டேய கட்ஜு தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.