பறக்கும் விமானத்தின் வெளியே நின்றபடி சாகஸங்கள்.. பெங்களூர் விமான கண்காட்சியில்
பெங்களூர்: பெங்களூரில் நடந்து வரும் 10வது சர்வதேச விமானக் கண்காட்சியில் நடத்திக் காட்டப்படும் விமான சாகஸங்களில் இந்தமுறை பார்வையாளர்களை மிக அதிகமாக கவர்ந்து வருவது இங்கிலாந்தின் Breitling Wingwalkers தான்.
இந்த ஆண்டில் தான் இந்த அணி முதன்முறையாக பெங்களூர் விமானக் கண்காட்சியில் நுழைந்துள்ளது.
Boeing Stearman biplanes எனப்படும் இரட்டை அடுக்கு இறக்கைகள் கொண்ட விமானங்களில் ஏறி நிற்கின்றனர் பெண் சாகஸ வீரர்கள். இறக்கையோடு கட்டப்பட்ட நிலையில் இந்த இரு விமானங்கள் டேக்- ஆப் ஆகின்றன. இதன் பின்னர் நடப்பது எல்லாம் நம்மை அசர வைக்கும் வினாடிகள் தான்.
விமானங்கள் 200 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டே இருக்க இந்த இரு பெண்களும் இறக்கைகளின் நடுவில் நின்றபடி ஏரோபேட்டிக்ஸில் ஈடுபடுகின்றனர். விமானங்கள் தலைகீழாகவும் வானில் பல்டி அடித்துக் கொண்டு பறக்க, இந்த இரு பெண்களும் பலவிதமான அசர வைக்கும் போஸ்களைத் தருகின்றனர்.
இந்த நிறுவனம் கடந்த 27 ஆண்டுகளாக உலகெங்கும் 2,500க்கும் மேற்பட்ட விமான சாகஸங்களை நடத்தியுள்ளதாம்.
பறந்து கொண்டிருக்கும் விமானத்துக்கு வெளியே வந்து சாகஸம் செய்வது என்பது 1918ம் ஆண்டில் தொடங்கியது. முதலாம் உலகப் போரில் அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த ஓர்மெர் லாக்லியர் என்ற விமானியின் விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டுவிட, அவர் விமானத்துக்கு வெளியே வந்து பிரச்சனையை சரி செய்துவிட்டு, மீண்டும் தனது காக்பிட்டுக்குள் போய், விமானத்தை தொடர்ந்து இயக்கினார்.
இதையடுத்தே பறக்கும் விமானத்துக்கு வெளியே சாகஸம் செய்வது தொடங்கியது. போர் முடிந்து விமானப் படையில் இருந்து ரிடையர் ஆன லாக்லியர் இந்த சாகஸம் செய்யத் தயாராக இருந்த சிலரோடு இணைந்து ஒரு குழுவை உருவாக்கினார். பின்னர் பறக்கும்போதே ஒரு விமானத்தில் இருந்து அடுத்த விமானத்துக்கு தாவுவது, இறக்கையின் இரு முனைகளிலும் இரு வீரர்கள் நின்று கொண்டு டென்னிஸ் ஆடுவது போன்ற விஷயங்களையும் அறிமுகப்படுத்தினார்.
அந்த வகையில் பின்னர் எதெல் டேர் என்ற பெண் விமானியும் இந்தக் குழுவினரோடு இணைந்து ஏராளமான சாகஸங்களைச் செய்தார்.
அந்த வரிசையில் தான் இப்போதைய பிரைட்லிங் விங்வாக்கர்ஸ் குழுவினரும் தங்களது சாகஸ பயணங்களைத் தொடர்ந்து கொண்டுள்ளனர்.
ரெட் புல் அணியின் தலைமை விமானியும் பெண் தான்:
அதே போல பெங்களூர் விமானக் கண்காட்சியில் பார்வையாளர்களை அசத்தி வரும் ரெட்புல்ஸ் விமானங்களின் தலைமை விமானியும் பெண் தான்.
செக் நாட்டைச் சேர்ந்த ராட்கா மகோவா என்ற பெண் தான் இந்த அணியின் தலைவர். இரு குழந்தைகளுக்கு தாயான இவர் உலகம் முழுவதும் ரெட் புல் அணிக்காக சாகஸங்களை நிகழ்த்தியுள்ளார்.
நேற்று இந்த விமானங்கள் சாகஸங்கள் செய்து கொண்டிருந்தபோது வானில் மோதிக் கொண்டன. இதில் ராட்காவின் விமானத்தின் இறக்கை உடைந்து போனது. ஆனாலும், எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார் ராட்கா.