சபரிமலை அய்யப்பன் கோவில் தங்க கொடி மரம் மீது பாதரசம் வீசி சேதம்- 5 பேர் கைது!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதியதாக நிறுவப்பட்ட தங்கக் கொடிமரம் மீது பாதரசம் வீசி சேதப்படுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பம்பை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதியதாக நிறுவப்பட்ட தங்க கொடிமரத்தை ரசாயனம் வீசி சேதப்படுத்தியதாக ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். தங்க கொடிமரத்தை சேதப்படுத்தியவர்கள் தப்பவே முடியாது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 9 கிலோ 161 கிராம் எடையுள்ள தங்க தகடுகளுடன் புதிய கொடி மரம் உருவாக்கப்பட்டது. இந்த புதிய கொடிமரத்தின் பிரதிஷ்டை நேற்று நடைபெற்றது.
திடீர் சேதம்
இந்த கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறிது நேரத்தில் மாலை 3 மணியளவில் கொடிமரத்தின் பீடம் சேதமடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அக்கொடி மரத்தின் மீது ரசாயனம் கலந்த துணி வீசப்பட்டிருந்தது.
முதல்வருக்கு தகவல்
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிசிடிவியில் சிக்கினர்
இது தொடர்பாக கோவில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆராயப்பட்டன. அப்போது 5 பேர் கொடிமரத்தை சேதப்படுத்துவது தெரியவந்தது.
முதல்வர் எச்சரிக்கை
இதையடுத்து 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்ககொடிமரத்தை சேதப்படுத்தியவர்கள் யாரும் தப்ப முடியாது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.