ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கும் சேது பாரதம் திட்டத்தை துவக்கி வைத்த மோடி
டெல்லி: 2019ம் ஆண்டுக்குள் ரயில்வே கிராசிங்குகள் இல்லா தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கும் சேது பாரதம் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் துவக்கி வைத்தார்.
2019ம் ஆண்டுக்குள் ரயில்வே கிராசிங்குகள் இல்லா தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கும் சேது பாரதம் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் துவக்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக அரசு ரூ.10 ஆயிரத்து 200 கோடி ஒதுக்கியுள்ளது. சேது பாரதம் திட்டம் மூலம் ரயில்வே கிராசிங்குகளில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும்.
சேது பாரதம் திட்ட துவக்க விழாவில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரியும் கலந்து கொண்டார். சேது பாரதம் திட்டம் தவிர ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலங்களை புதுப்பிக்கவும், சாலைகளில் மேம்பாலங்கள் கட்டவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து கட்காரி கூறுகையில்,
1,500 பாலங்கள் 50 முதல் 60 ஆண்டு பழமையானவை. அவற்றை இடித்துவிட்டு புதிய பாலங்கள் கட்ட திட்டமிட்டுள்ளோம். ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் கட்ட 208 இடங்களை தேர்வு செய்துள்ளோம் என்றார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக அளவில் விபத்துகள் நடப்பதை தடுக்க வேண்டும் என்பது தனது அரசு உறுதியாக உள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.