சட்டசபை தேர்தல்களுக்கு வியூகம்- பிரதமர் இல்லத்தில் பாஜக பொதுச்செயலர்களுடன் மோடி ஆலோசனை!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனதா கட்சி பொதுச்செயலாளர்களுடன் தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது எதிர்வரும் மாநில சட்டசபை தேர்தல்களுக்கு தயாராகும்படி அவர்களிடம் மோடி கேட்டுக் கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பு ஏற்றுக்கொண்ட பின்னர் நேற்று தனது இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், பொதுச் செயலாளர்கள் ராம்லால், அமித்ஷா, அனந்த்குமார், தர்மேந்திர பிரதான், வருண்காந்தி, ராஜீவ் பிரதாப் ரூடி, தாவர்சந்த் கெலாட், ஜே.பி.நட்டா, தபிர் கோவ், முரளிதர்ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில், கட்சியை வலிமைப்படுத்தவும், சிறப்பாக வழிநடத்தவும் ஆலோசனை வழங்கும்படி அவர்களிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
மேலும் மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியிலும், ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர், பீகார் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டும் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.
அதேபோல 2016-ம் ஆண்டு தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது.
எனவே அடுத்தடுத்து நடைபெறவுள்ள மாநில சட்டசபை தேர்தல்களுக்கு தயாராகும்படியும் கட்சித் தலைவர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.