'தாதாவை' பாஜகவில் சேர்க்க பிரதமர் நரேந்திரமோடி முயற்சி
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் அரசியல் கட்சிகளில் இணைவது என்பது சினிமா ஸ்டார்கள் இணைப்புக்கு ஈடானது. ஏனெனில் எளிதாக மக்களிடம் அவர்கள் அடையாளப்பட்டிருப்பார்கள். சினிமாவைவிட கிரிக்கெட்டின் தாக்கம் மக்கள் மத்தியில் அதிகம். ஏனெனில் கிரிக்கெட் வீரர்களை தெரிந்து வைத்திருக்க மொழி ஒரு தடை கிடையாது. சிறியவர் முதல் பெரியவர் வரை கிரிக்கெட் வீரர்களை நன்கு அறிந்து வைத்திருப்பார்கள்.
சித்து, சச்சின்
ஏற்கனவே, நவ்ஜோத்சிங் சித்து பாஜகவிலும், முகமது கைப் காங்கிரசிலும் இணைந்துள்ளனர். சூதாட்ட புகாரில் சிக்கி அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட முகமது அசாருதீனும் காங்கிரசிலுள்ளார். சச்சின் டெண்டுல்கர் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளபோதும், அரசியலில் ஈடுபடவில்லை.
ஆக்ரோஷ கங்குலி தேவை
ஆனால் சமீபத்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் தீவிர பிரச்சாரத்திற்காக பாஜகவுக்கு தேவைப்படுகிறார்கள். அந்த வகையில் ஆக்ரோஷத்துக்கு பெயர்போன சவுரவ் கங்குலியை பாஜகவில் இணைக்க அக்கட்சி படாதபாடு படுகிறது.
மே.வங்கத்தில் கால்பதிக்க..
பாஜக கால்வைக்க முடியாத மாநிலங்களில் ஒன்று மேற்கு வங்கம். எனவே 'கொல்கத்தா இளவரசன்' என்று வங்காளிகள் கொண்டாடும், சவுரவ் கங்குலியை துருப்புச் சீட்டாக்கி மேற்கு வங்கத்தில் முத்திரை பதிக்க நினைக்கிறது பாஜக.
துடைப்பத்தை எடுக்க தயார்
இந்நிலையில்தான் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதராக இருக்குமாறு கங்குலிக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இதை உடனடியாக கங்குலி ஏற்றுக் கொண்டுள்ளார்.
இது ஒரு நல்ல முயற்சி
தற்போது ஆஸ்திரேலியாவிலுள்ள கங்குலி இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், "தூய்மை இந்தியா திட்டம் நாட்டுக்கு அவசியமான ஒன்று. இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கம் மிக அதிகம். எனவே, மாசு, சுகாதார சீர்கேடு போன்றவை அதிகமாக உள்ளன. இதை தடுக்க தூய்மை இந்தியா திட்டம் உதவும் என்பதால் நான் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளேன்" என்றார்.
பாஜக நோக்கி பயணம்?
அரசியல் குறித்து கங்குலி எதுவும் தெரிவிக்கவில்லை என்றபோதிலும், அவர் பாஜகவை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளார் என்றே மேற்கு வங்க ஊடகங்கள் பலவும் தெரிவிக்கின்றன.