இந்தியப் பிரதமரை ‘கிராமத்துப் பெண்’ என்பதா...? நவாஸ் பேச்சுக்கு மோடி கண்டனம்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் ‘கிராமத்துப் பெண்' போன்று புறம் பேசுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் நரேந்திரமோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவில் ஒன்று கூடியுள்ளனர் பிறநாட்டுத் தலைவர்கள். இதற்காக, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் கடந்தவாரம் அமெரிக்கா சென்றார். அங்கு, அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்தித்த பிரதமர், ‘பாகிஸ்தான் தீவிரவாதத்தின் மையப் பகுதியாகத் திகழ்வதாக' குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் அந்த நாட்டின் பிரபல பத்திரிகையாளர் ஹமீத் மீர் மற்றும் இந்தியாவின் ‘என்.டி.டி.வி.' சிறப்புச்செய்தியாளர் பர்கா தத் ஆகியோர் காலை நேர சிற்றுண்டியின்போது உரையாடிக்கொண்டு இருந்தனர்.
பின்னர், அது குறித்து பாகிஸ்தான் செய்தியாளர் ஹமீத் மீர், ‘ஜியோ டி.வி.'க்கு அளித்த செய்தியில், ‘மன்மோகன்சிங் ஒபாமாவிடம் கூறிய புகார் குறித்து குறிப்பிட்ட நவாஸ் ஷெரீப், மன்மோகன்சிங்கை கிராமத்துப் பெண்ணுக்கு (திகாதி அவுரத்) ஒப்பிட்டதாக (அதாவது கிராமங்களில் பெண்கள் பக்கத்து வீட்டுப் பெண்களை பற்றி ஒருவருக்கு ஒருவர் புகார் கூறி பேசுவது) கூறி இருந்தார்.
இந்தியப் பிரதமரை கிராமத்துப் பெண் என கூறிய நவாஸ் ஷெரீப்பின் இந்த கருத்தால் சர்ச்சை உருவாகியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நரேந்திரமோடி, நவாஸ் ஷெரீப்பின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், மோடி தனது உரையில் கூறியதாவது, ‘‘எனது நாட்டின் பிரதமரை கிராமத்துப் பெண் என்று ஒப்பிட்டுப் பேச உங்களுக்கு என்ன தைரியம்? இதைவிட வேறு அவமானம் எதுவும் இந்திய பிரதமருக்கு இருக்க முடியாது. கொள்கை அளவில் அவருடன் (மன்மோகன்சிங்) எங்களுக்கு மோதல் இருக்கலாம். ஆனால், இதுபோன்ற அவமானத்தை எங்கள் நாட்டின் 120 கோடி மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது. இந்த பேட்டியின்போது உடன் இருந்த இந்தியப் பத்திரிகையாளர்கள் உடனடியாக வெளிநடப்பு செய்து இருக்க வேண்டும்'' என்றார்.
மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய செய்தியாளர் பர்காதத் தனது இணைய தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘‘அதிகாரபூர்வமற்ற முறையில் சாதாரணமாக நடைபெற்ற பேச்சு அது. அதிலும்கூட நவாஸ் ஷெரீப் கிராமத்துப்பெண் என்ற வார்த்தையை மன்மோகன்சிங்குக்கு எதிராக பயன்படுத்தவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.