போபால்: மோடி பெயரைக் கேட்டு ஆர்ப்பரித்த தொண்டர்கள்.. பேச்சைச் சுருக்கிய அத்வானி
போபால்: நேற்று போபாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதம வேட்பாளாரும், தற்போதைய குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடி மூத்த பாஜக தலைவர் அத்வானியின் கால்களைத் தொட்டு ஆசி வாங்கினார்.
மத்தியப் பிரதேசத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தலைநகர் போபாலில் பாரதிய ஜனதாவின் மிகப்பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, எல்.கே. அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, வெங்கையா மற்றும் மத்தியப்பிரதேச மாநில முதல் மந்திரி சிவ்ராஜ் சிங் சவுஹான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆசிர்வாதம் பண்ணுங்க...
அப்போது பொதுக்கூட்ட மேடையில் வைத்து, பாஜகவின் மூத்த தலைவரான அத்வானி காலில் விழுந்து, ஆசிர்வாதம் பெற்றார் தற்போதைய குஜராத் முதலமைச்சரும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதம வேட்பாளருமான நரேந்திர மோடி.
ஆசிர்வாதம் தந்தாரா..?
மோடி காலில் விழுந்து ஆசி வாங்கவும், அவரை தோளைத் தொட்டு ஆசிர்வதித்தார் அத்வானி.
வேலையே வெற்றியின் ரகசியம்....
அதனைத் தொடர்ந்து விழாவில் பேச வந்தார் அத்வானி. அப்போது அவர் பேசியதாவது, ‘பாரதிய ஜனதா இன்று அரசியலில் ஒரு நிலையை அடைந்து இருக்கிறதென்றால், அதற்கு காரணம் சொல்திறன் மிக்க பேச்சுக்கள் மட்டும் காரணமில்லை. கட்சித்தொண்டர்களின் கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும் தான் காரணம். பேச்சின் அடிப்படையில் மட்டும் நாம் வெற்றி பெற்று இருக்கமுடியாது. ஆனால், இது நாம் செய்த வேலையின் அடிப்படையிலேயே சாத்தியமாகியிருக்கிறது.
வெற்றி நிச்சயம்....
முன்னர் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியும், முதலமைச்சர்கள் மோடி, சவுஹான், ராமன் சிங் ஆகியோரின் தற்போதைய ஆட்சியும் மிக சிறப்பாக உள்ளன. மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். பிரதமர் வேட்பாளராக மோடியை கட்சியின் தலைமை தேர்ந்தெடுத்து இருக்கிறது' எனப் பேசினார்.
கரகோஷம்...கடுப்பான அத்வனி
ஆனால், உரையின் நடுவே மோடியின் பெயரை அத்வானி உச்சரித்த போது பொதுக்கூட்டத்தில் எழுந்த கரகோஷத்தைத் தொடர்ந்து விரைவாக தனது பேச்சை அத்வானி முடித்துக் கொண்டதாக தெரிகிறது.
மற்ற தலைவர்கள் உரை....
அத்வானியைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், உமாபாரதி உள்ளிட்ட மற்ற தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் பேசினர்.