சிறுபான்மையினர் கைது தொடர்பான ஷிண்டே அறிவுறுத்தல்- பிரதமருக்கு மோடி கண்டன கடிதம்
அகமதாபாத்: சிறுபான்மை இளைஞர்கள் கைது நடவடிக்கையின் போது கவனமாக இருக்குமாறு உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அறிவுறுத்தியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.
சிறுபான்மை இன இளைஞர்களை கைது செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அறிவுறுத்தல் விடுத்திருந்தார். இதற்கு பாரதிய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி இந்த விவகாரம் தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், சிறுபான்மை இனத்தவர் தொடர்பான ஷிண்டேயின் அறிவுறுத்தல் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
நாட்டின் அனைத்து சமூகத்தினருமே சம நிலையில்தான் நடத்தப்பட வேண்டும். எந்த ஒரு சமூகத்தை அல்லது இனத்தைச் சேர்ந்தவருமே பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் சரியான நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்று அதில் மோடி வலியுறுத்தியுள்ளார்.