அடப்பாவிகளா! அபராத தொகைக்கு ஜிஎஸ்டியா?... உலக சாதனை படைத்த மும்பை போலீஸ்!!
அபராத தொகைக்கு ஜிஎஸ்டியை மும்பை போலீஸார் வசூலித்தது வியப்பில் ஆழ்த்தியது.
மும்பை: ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதை அடுத்து நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தியவரிடம் அபராதம் விதிக்க வழங்கப்பட்ட ரசீதில் மும்பை போலீஸார் ஜிஎஸ்டியும் விதித்ததால் அந்த நபர் அதிர்ச்சி அடைந்தார்.
கடந்த 1-ஆம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே வரி ஒரே தேசம் என்ற ஸ்லோகனுடன் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தது. இதனால் பொருள்கள் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சொகுசு கார்கள், பைக்குகள் விலை குறைந்துள்ளது. மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் நாடே கொதித்து போயுள்ளது. இந்நிலையில் மும்பை போலீஸார் ஒரு சாதனை படைத்துள்ளனர்.
அதாகப்பட்டது என்னவென்றால், கடந்த 1-ஆம் தேதி காண்டீவலி பகுதியில் நோ பார்க்கிங் பகுதியில் ஒருவர் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்த கடைக்கு சென்றுவிட்டார்.
இதைக் கண்ட போக்குவரத்து போலீஸார் அங்கு அந்த வாகனத்தை கயிறு கட்டி எடுத்துக் கொண்டு மும்பை காவல் நிலையத்தில் வைத்துக் கொண்டனர். இதையறிந்து பதறியடித்துக் கொண்டு அங்கு வந்தார் கார் உரிமையாளர்.
அப்போது அவரிடம் அபராதம் விதித்ததற்கான ரசீது அளிக்கப்பட்டது. இதை கண்ட நபருக்கு அதிர்ச்சி. அதில் அபராதத் தொகை ரூ.200-ம், வண்டியை கட்டி இழுத்து சென்றதற்கு ரூ.200-ம், ஜிஎஸ்டி மத்திய அரசுக்கு ரூ.36-ம், மாநில அரசுக்கு ரூ.36-ம், ஆக மொத்த ரூ.472 செலுத்துமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
எதற்கெல்லாம் வரியை விதிப்பது என்று தெரியாமல் போலீஸார் உள்ளனரே? என்று போன்றும், அபராதத் தொகைக்கே ஜிஎஸ்டி விதித்த அடடே போலீஸ் என்றும் உலக சாதனை படைத்த மும்பை போலீஸ் என்றும் சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கின்றனர்.