நோன்புக்கஞ்சி, பேரீச்சம்பழத்துடன் முதல் நாள் நோன்பை திறந்த முஸ்லீம்கள்
ஹைதராபாத்: முஸ்லீம்கள் புனித ரமலான் மாதத்தின் முதல் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் புனித ரமலான் மாத பிறை ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிந்தது. இதையடுத்து முஸ்லீம் மக்கள் நேற்று முதல் நோன்பு இருக்கத் துவங்கினார். முதல் நாளான நேற்று நோன்பு இருந்தவர்கள் மாலையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நோன்பு கஞ்சி, பேரீத்தம்பழம், பஜ்ஜி, வடை மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.
இதே போன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்சி வழங்கப்படும். இதற்காக மாநில அரசுகள் அரிசி வழங்கும். மேலும் தனிநபர்களும் நோன்பு கஞ்சி காய்ச்ச அரிசி வழங்குவார்கள்.
பள்ளிவாசல்களில் நடக்கும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தனிநபர்கள் பழங்கள் மற்றும் உணவு பொருட்களை வழங்கி நன்மையை தேடிக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.