என் பிரச்சனை எல்லாம் ஒரு பெரிய பிரச்சனையா? ஜுஜுபி: சல்மான் கான்
காஷ்மீர்: என் பிரச்சனைகள் பேசும் அளவுக்கு பெரியது அல்ல என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 2002ம் ஆண்டு மும்பை பந்த்ரா பகுதியில் குடிபோதையில் காரை ஓட்டி சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றினார். இதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர். சுமார் 13 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் சல்மானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த 6ம் தேதி தீர்ப்பளித்தது.
சல்மானோ தீர்ப்பு கிடைத்த வேகத்தில் ஜாமீன் பெற்றார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை சஸ்பெண்ட் செய்து மும்பை உயர் நீதிமன்றம் கடந்த 8ம் தேதி உத்தரவிட்டது.
சமூக வலைதளங்கள்
சல்மான் கானுக்கு ஜாமீன் கிடைத்த வேகம் பற்றியும், அவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தண்டனை சஸ்பெண்ட் செய்யப்பட்டது பற்றியும் பலர் சமூகவலைதளங்களில் விமர்சித்தனர். காசு, பணம், துட்டு இருந்தால் தவறே செய்தாலும் சிறைக்கு செல்லத் தேவையில்லை என்று மக்கள் விமர்சித்தனர்.
படப்பிடிப்பு
5 ஆண்டு சிறை தண்டனை சஸ்பெண்ட் செய்யப்பட்ட கையோடு சல்மான் கான் பஜ்ரங்கி பாய்ஜான் இந்தி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள காஷ்மீர் கிளம்பி சென்றுவிட்டார்.
சல்மான்
காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கு பற்றி காஷ்மீரில் பத்திரிக்கையாளர்கள் சல்மான் கானிடம் கேட்டனர். அதற்கு அவரோ, பேசும் அளவுக்கு என் பிரச்சனை பெரிது அல்ல. நாம் இங்கு சுற்றுலாவுக்காக வந்துள்ளோம், அதை பற்றி பேசுவோம் என்றார்.
பிரச்சனை
சல்மான் கான் பல ஏழை குடும்பங்களுக்கு உதவி செய்தாலும் அவர் ஒருவரை கொன்ற வழக்கில் தண்டனை பெறாமல் வெளியே இருப்பதை பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.