ஏன் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டுக்குப் போகவில்லை.. நாராயணசாமி விளக்கம்
டெல்லி: தமிழர்களுக்கு எதிரான தொடர் அடக்குமுறைகள் காரணமாகத்தான் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 2009-ம் ஆண்டு இனப்படுகொலைகளை நிகழ்த்திய இலங்கை அரசுக்கு எதிராக கொதித்து எழுந்துள்ள தமிழர்கள், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என்று கூறி வருகின்றனர். தமிழர்கள் அதிகமுள்ள புதுச்சேரியிலிருந்து வந்திருக்கும் நானும், அவர்களின் மனநிலையை ஆரம்பத்திலிருந்து பிரதிபலித்துக்கொண்டு வந்திருக்கிறேன்.
மைனாரிட்டியாக உள்ள தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இருந்து இலங்கை ராணுவத்தினர் வெளியேறவில்லை. 20 வருடங்களாக நடந்த சண்டையில் இடம்பெயர்ந்துள்ள தமிழர்களின் நிலங்களை இலங்கை அரசு இன்னும் அவர்களிடம் கொடுக்கவில்லை.
நீண்டகாலமாக நீடித்துவரும் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண காம்ன்வெல்த் மாநாட்டு பயணத்தை கைவிட வேண்டுமென தமிழகத்தை சேர்ந்த பி.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன் மற்றும் நானும் கேட்டுக்கொண்டோம். இதையடுத்து பிரதமர் அந்த பயணத்தை கைவிட முடிவெடுத்தார்.
இலங்கையுடன் தூதரக உறவுகள் இருந்தும் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொண்டிருப்பது அடுத்த பிரச்சினை. இலங்கையில் தேர்தல் நடத்த இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சியானது, இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் சீனாவின் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவரும் என்று அரசியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர் என்று கூறியுள்ளார் நாராயணசாமி.