பாஜக எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு மோடி வாய்ப்பூட்டு... வரம்பு மீறி பேச வேண்டாம் என கண்டிப்பு!
Recommended Video
டெல்லி : பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி வாய்ப்பூட்டு போட்டுள்ளார். மீடியாவில் சமூக விஞ்ஞானிகள் போல உளறிக் கொட்டவேண்டாம் எனவும் பொது பிரச்சனைகளில் வரம்பு மீறி பேச வேண்டாம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
நமோ செயலி குறித்து பாஜக எம்.பி., எம்.எம்.எல்.ஏக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். இந்த உரையாடலின் போது பாஜக தலைவர்களின் பேச்சால் பிரதமர் அதிருப்தியில் இருப்பது வெளிப்பட்டது. கத்துவா,உன்னோவ் மற்றும் சூரத் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாஜகவினர் கூறும் கருத்துகளும், ஜம்முவில் குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் பாஜகவினர் பங்கேற்றது உள்ளிட்ட காரணங்கள் பாஜக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாஜகவினர் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி "நாம் தொடர்ந்து செய்யும் தவறுகள் மீடியாக்களுக்கு தீனி போட்டு வருகிறது. மீடியாக்கள் கேமராக்கள் முன்னதாக பேசும்போது, நாம் சிறந்த சமூக விஞ்ஞானிகள் போலவும், ஆய்வாளர்கள் போலவும் நினைத்துக்கொண்டு வார்த்தைகளை பிரயோகம் செய்கிறோம். அது நம்மை சிக்க வைக்கிறது, நாம் வாய் தவறி கூறும் வார்த்தைகளை மீடியாக்கள் ஊதி பெரிதாக்குகிறது. தீவிரவாதம், பாலியல் பலாத்காரம் என எந்த பிரச்னைகளை எடுத்து கொண்டாலும் இது நடக்கிறது. இதை பற்றிய கொஞ்சமும் கவலைப்படாமல் கருத்துக்களை தெரிவித்து வருகிறோம். இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது என்று கடுமையாக தெரிவித்தார்.
பாஜகவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த முக்கிய அட்வைஸ்கள் இது தான்:
1) பாஜக தலைவர்களும், உறுப்பினர்களும் பிரச்னைகளை திசை திருப்பும் விதமாகவும், பொறுப்பற்ற அறிக்கைகளையும் சமூக பிரச்னைகளில் தெரிவிக்கக் கூடாது.
2) நாம் செய்யும் தவறுகள் மீடியாக்களுக்கு 'மசாலாவாக' அமைந்துவிடுகிறது. பாஜகவினர் யோசிக்காமல் கூறும் கருத்துகள் மீடியாக்களுக்கு தீனியாகிவிடுகின்றன, அது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது. "மீடியாக்கள் தான் இதனை செய்வதாக நமது கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் பிரச்னை நம்மிடம் இருந்து தான் தொடங்குகிறது, நாம் பேசும் பேச்சுகளைத் தான் அவை பெரிதுபடுத்துகின்றன.
3) மீடியாக்களிடம் பேச அனுமதி அளிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர்கள் மட்டுமே இனி மீடியாக்களிடம் பேச வேண்டும். அனைவரும் பேசத் தொடங்குவதன் மூலம் பிரச்னை திசை மாறி விடுகிறது. இது நாட்டிற்கும், கட்சிக்கும், தனி நபருக்குமான நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. கட்சியால் செய்தித் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் மட்டுமே பிரச்னைகள் குறித்து பாஜகவின் கருத்தை தெரிவிக்க வேண்டும்.
4) சமூதாயத்தின் அனைத்து பிரச்னைகளிலும் கருத்து கூறிக்கொண்டிருக்கத் தேவையில்லை, அவ்வாறு கருத்து கூறும் போது விஞ்ஞானிகள்,ஆய்வாளர்கள் போல கருத்து கூறுவதைத் தான் மீடியாக்கள் மசாலாக்களாக பயன்படுத்துகின்றன. ஒரு பிரச்னை பற்றி கருத்து கூறும் முன்னர் நன்கு யோசித்து பேச வேண்டும், அதை விட்டுவிட்டு மீடியாக்கள் பெரிதுபடுத்துவதாக புலம்புவதில் அர்த்தமில்லை.
5) பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் 8 முதல் 10 எம்,.பிக்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தனர். அவர்களுடன் நான் பேசிய பிறகு கடந்த 3 ஆண்டுகளில் அவர்கள் எந்த அறிக்கையையும் கொடுக்கவில்லை என்பதை பிரதமர் தமது கலந்துரையாடலில் சுட்டிக்காட்டினார்.
6) மத்திய இணை அமைச்சர் சந்தோஷ் கெங்கவார் நாட்டில் நடக்கும் ஒன்றிரண்டு பாலியல் பலாத்கார சம்பவங்களை பெரிதுபடுத்தக்கூடாது என்று கூறி இருந்தார். கத்துவா, உன்னோவ் சம்பவங்களால் நாடே போராட்டகளமாகியுள்ள நிலையில் மத்திய இணை அமைச்சர் கூறிய இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
7) அர்த்தமற்ற கருத்துக்களை கூறுவதையும், ஆர்வக்கோளாறில் கருத்துக்களை தெரிவிப்பதையும் நாம் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். ஊடகங்கள் அவர்களது பணியை செய்யட்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். நமோ செயலி குறித்த வீடியோ கான்பரன்சிங்கின் போது பாஜக எம்.பிக்களிடம் உரையாற்றுகையில் பிரதமர் மோடி கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். சமூக ஊடகங்களின் முழுதிறனையும் பயன்படுத்துமாறு கட்சியின் தலைவர்களுக்கு மோடி அறிவுரையும் வழங்கி உள்ளார்.