மோடி நாளை விமானம் தாங்கி கப்பலில் பயணம்: ரூ.15,000 கோடி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
பானாஜி: கடற்படை கப்பல்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிவரும் நிலையில், பிரதமர் நரேந்திரமோடி நாளை இந்தியாவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க் கப்பலான 'ஐஎன்எஸ் விக்ரமாதித்யா'வில் பயணிக்க உள்ளார்.
இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதனால் கடற்படை வீரர்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நாட்டுக்கு நாளை அர்ப்பணித்து வைத்து அதில், நரேந்திரமோடி பயணிக்க உள்ளார்.
"கோவா அருகே அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்க உள்ள பிரதமர் கப்பலை சுற்றிப் பார்க்க உள்ளார். இதன்பிறகு பிற போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் தங்களது சாகசங்களை செய்து காண்பிக்க உள்ளன" என்று பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
ரஷ்யாவிடமிருந்து ரூ.15ஆயிரம் கோடி அளித்து வாங்கப்பட்ட விக்ரமாதித்யா போர்க்கப்பல், 44,500 டன் எடை கொண்டது. 284 மீட்டர் நீளமும், 60 மீட்டர் உயரமும் பரப்பளவாக கொண்ட இந்த கப்பலை 3 கால்பந்தாட்ட மைதானங்களுக்கு ஈடாக கூறலாம். ஒரே நேரத்தில் இக்கப்பலில் 1600 பேர் பயணிக்கலாம். ஒரு லட்சம் முட்டைகள், 20 ஆயிரம் லிட்டர் பால், 16 டன் அரிசி ஆகியவற்றை சேமித்து வைக்க இதில் வசதியுள்ளது.
இது ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலாகும். ஏற்கனவே இந்தியாவிடம் ஐஎன்எஸ் விராட் என்ற போர்க்கப்பல் உள்ள நிலையில், விக்ரமாதித்யா வருகையால், ஆசியாவிலேயே இரு அதி நவீன போர்க்கப்பல்களை வைத்துள்ள ஒரே நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
இந்த கப்பலில் இருந்தபடி, பல்வேறு கடற்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் சாகசங்களை மோடி ரசிக்க உள்ளார். அப்போது இந்திய பாதுகாப்புதுறை அமைச்சர் அருண்ஜெட்லி, ரஷ்ய அதிகாரிகள் உடனிருப்பார்கள். சாகசங்களுக்கு பிறகு, கப்பலிலுள்ள மாலுமிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாட உள்ளார். கடந்த மாதம் 26ம்தேதி பிரதமராக பதவியேற்ற மோடி அதன்பிறகு மேற்கொள்ளும் முதல் வெளியூர் சுற்றுப்பயணம் இதுவாகும்.