வாரணாசி: மோடியின் நாளைய பொதுக்கூட்டத்துக்கு திடீர் தடை! தேர்தல் ஆணையத்திடம் புகார்!!
அகமாதாபாத்: குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி நாளை வாரணாசி பொதுக்கூட்டத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கங்கையில் ஆரத்தி வழிபாடு நடத்துவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வாரணாசி லோக்சபா தொகுதியிலும் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவர் நாளை வாரணாசியில் 2 தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க இருக்கிறார்.
இந்த நிலையில் திடீரென, அவரது பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் ஒன்றில் ஏற்கெனவே கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறி மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் புகார் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பாஜகவின் மூத்த தலைவர் அருண்ஜேட்லி புகார் தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகார் மனுவில், அனுமதி மறுத்த அதிகாரியை நீக்கவும் அவர் கோரியுள்ளார்.
இதனிடையே வாரணாசியில் நாளை மாலை கங்கை ஆரத்தி என்ற வழிபாட்டு நிகழ்ச்சிக்கும் மோடி அனுமதி கோரியிருந்தார். இந்த வழிபாட்டு நிகழ்ச்சிக்கும் தேர்தல் அதிகாரி அனுமதி மறுத்துவிட்டார். இதனால் பாஜகவினர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.