மீடியாக்களுடன் உறவை வளர்க்க முயற்சி செய்வேன்: 'டீ பார்ட்டியில்' மோடி உறுதி
டெல்லி: ஊடகங்களுடன் நல்ல உறவை மேம்படுத்த முயற்சி செய்வதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
ஊடகங்களிடமிருந்து விலகியே இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. அவர் விரும்பும் நேர்த்தில் மட்டும், ஊடகங்களில் பேசி வருகிறார். பிரதமராகிய உடனேயோ, மாநிலங்களின் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானபோதோ கூட மீடியாக்களை சந்திக்காத மோடி, இன்று முதன்முறையாக மீடியாக்களுடன் சந்திப்பு நடத்தினார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, செய்தியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று டீ விருந்து அளித்தார். "தீபாவளி மிலன்" என்றழைக்கப்படும் இந்த விருந்தில் கலந்து கொள்ள 400க்கும் மேற்பட்ட செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் எடிட்டர்களும் அடங்குவர்.
காலை 11 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்தில் தொடங்கிய விருந்து, மதியம் 1 மணிவரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மீடியா பிரதிநிதிகள் மத்தியில் பேசிய மோடி, "நானும் ஒரு காலத்தில், மீடியா பிரதிநிதிகளுக்காக இருக்கைகளை போட்டு காத்திருந்து பேட்டியளித்துள்ளேன். மீடியாக்களுடன் நல்ல உறவை வைத்திருந்தேன். ஆனால் மீடியாக்களுடன் கலந்து பேச முடியாத சூழ்நிலையும் உருவானது. இருப்பினும் மீடியாக்களுடனா உறவை மேம்படுத்துவது எப்படி என்பது குறித்து ஆலோசித்து வருகிறேன்.
கடந்த ஒரு மாதமாகவே தூய்மை இந்தியா திட்டம் குறித்து பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதை பார்க்கிறேன். சமூக வலைத்தளங்களிலும் ஸ்வச்பாரத் திட்டம் குறித்து அதிக சர்ச்சை நடந்து வருகிறது. இந்தியாவை சுத்தப்படுத்த தனி நபர்கள் எப்படி பங்களிக்க வேண்டும் என்பதை மீடியாக்கள் கற்றுத்தருவது மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதற்காக மீடியாக்களுக்கு அரசு சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சுத்தம், சுகாதாரம் குறித்து இதுவரை எழுதாத பல மீடியா எழுத்தாளர்கள், இப்போது தங்கள் பேனாக்களை, துடைப்பமாக மாற்றி அதுகுறித்து எழுதி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
மீடியாக்கள் அளிக்கும் விழிப்புணர்வு காரணமாக, பட்டாசு வெடித்த பிறகு அதனால் சேரும் குப்பைகளை மக்களே அகற்றிவருவதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.
குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக அனைத்து மீடியாக்களும் நரேந்திரமோடியை கடுமையாக விமர்சனம் செய்தன. மோடி மீது தனிமனித தாக்குதலில் மீடியாக்கள் இறங்கின. குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் இதுபோல செய்தனர்.
அப்போதிருந்தே, மீடியாக்களை ஒதுக்கி வைத்தார் மோடி. அப்படியிருந்தும், குஜராத்தில் மீண்டும் முதல்வராக தேர்வானார். இதனால் மீடியாக்களை ஒதுக்கி வைத்த தனது முடிவை அவர் மறுபரிசீலனை செய்யவில்லை. முழுக்க சமூக வலைத்தளங்களில் மட்டுமே மோடி கவனம் செலுத்த தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.