தவறு செய்பவர்கள் கண்டிப்பாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்... சூசகமாக மோடியை தாக்கும் சிதம்பரம்
டெல்லி: தவறு செய்பவர்கள் மன்னிப்பு கோருவது தான் கண்ணியமான செயல் என மறைமுகமாக மோடியைத் தாக்கிப் பேசியுள்ளார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
நேற்று நடந்த குஜராத் லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தலில் வாக்களித்த பாஜக பிரதமர் வேட்பாளரும், அம்மாநில முதல்வருமான மோடி, கையில் தாமரைச் சின்னத்துடன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இது தேர்தல் நடத்தை விதிமீறல் என பிற கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் மோடி மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தது. மோடி மீது எப்.ஐ.ஆர்.ம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். அப்போது அவர், ‘யாரோ ஒருவர் தவறான பாதையில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டால் அவர் கண்டிப்பாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதுதான் கண்ணியமிக்க செயலாகும் என நினைக்கிறேன்' எனக் கருத்துத் தெரிவித்தார்.
ஏற்கனவே மோடிக்கும் ப.சிதம்பரத்துக்கும் இடையே வெளிப்படையான மோதல் போக்கு உள்ள நிலையில், நேற்றைய மோடி மீதான வழக்குப்பதிவைக் குறித்துதான் பெயரைச் சொல்லாமல் சிதம்பரம் மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளார் எனக் கூறப்படுகிறது.