இவர் நினைத்திருந்தால்.. குஜராத் முடிவே மாறியிருக்கும்! ஒதுங்கி நின்ற கிங் மேக்கர்.. யார் இந்த நரேஷ்?
காந்திநகர்: கடந்த ஜூன் மாதம் காங்கிரஸ் தலைவராக இருந்த ஹர்திக் பட்டேல் பாஜகவில் திடீரென இணைந்தார். இவர் பாஜகவில் இணைந்த உடன் பட்டிதார் சமூக வாக்குகள் எல்லாம் பாஜகவிற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை தடுப்பதற்காக காங்கிரஸ் நம்பி இருந்த நபர்தான் நரேஷ் பட்டேல்! அதே பட்டிதார் சமூகத்தை சேர்ந்த மிக முக்கியமான தொழிலதிபர்!
குஜராத்தில் பட்டிதார் இனப்பிரிவான Leuva Patel பிரிவை சேர்ந்தவர்தான் நரேஷ் பட்டேல். அந்த சமூகத்தில் மிக மதிப்புமிக்க நபர். அந்த சமூகத்திற்காக தொடர் போராட்டங்கள், முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார் நரேஷ் பட்டேல். இவரை காங்கிரசுக்கு இழுக்க முயற்சிகள் கடந்த ஒரு வருடமாக தீவிரமாக நடந்து வந்தன.
அதிலும் ஹர்திக் பட்டேல் இடத்தை அவர் நிரப்புவார் என்று காங்கிரஸ் நம்பியது.. ஆனால் கடைசிவரை இவர் காங்கிரஸ் பக்கம் வரவே இல்லை.
ஆரம்பத்தில் பின்னடைவு.. சர்ரென ஏறிய வாக்குகள்.. முன்னிலைக்கு வந்த ஹர்திக் படேல்! வாகை சூடுவாரா?
ஹர்திக் பட்டேல்
காங்கிரஸ் என்று மட்டுமில்லை ஆம் ஆத்மி கட்சியும் நரேஷை தங்கள் பக்கம் இழுக்க தீவிரமான முயற்சிகளை செய்து வந்தது. இவர் எஸ்கேடி எனப்படும் Shree Khodaldham Trust நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக செயல்படுத்தப்படும் கோதல்தம் கோவில் என்பது பட்டேல் இன மக்களின் குலதெய்வ கோவிலாக பார்க்கப்படுகிறது. இந்த கோவிலை நரேஷ் பட்டேல் நடத்தி வருவதால், குஜராத் அரசியலில் மிக முக்கியமான கோவிலாக பார்க்கப்படுகிறது.
பட்டிதார்
பட்டேல் இன மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக இங்கே சென்று ஆக வேண்டும். அதனால்தான் ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பல ஆம்ஆத்மி நிர்வாகிகள் இங்கே சென்று வழிபாடு நடத்தினர்,. இங்கே நடந்த கூட்டங்களுக்கும் சென்றனர். பாஜக முன்னாள் முதல்வர் அனந்தி பென் பாட்டீல் என்று பலர் பாஜகவில் இருந்தும் கூட இங்கு வழிபாடு செய்ய சென்றனர். இங்கு இவர்கள் வழிபாடு செய்ய செல்வது கடவுளை பார்க்க அல்ல.. நரேஷ் பட்டேலை பார்க்க. நரேஷ் பட்டேலை பார்த்து எப்படியாவது அவரின் ஆதரவை திரட்ட காங்கிரஸ்.. ஆம் ஆத்மி.. பாஜக என்று எல்லா கட்சிகளும் முயன்றன.
நரேஷ் பட்டேல்
நரேஷ் பட்டேல் சொன்னால் அதற்கு அப்படியே தலையாட்ட 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பட்டேல் சமூகத்தினர் தயாராக இருக்கின்றன. அந்த மக்களுக்காக போராடுவது, அவர்களை வழக்குகளில் இருந்து விடுவிப்பது, போலீஸ் பிரச்சனைகளில் தலையிடுவது, அவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பது, அவர்களுக்காக வேலைவாய்ப்பு பிரச்சனைகளில் குரல் கொடுப்பது என்று நரேஷ் படேல் மிக முக்கியமான தலைவராக பட்டேல் சமூகத்தினரிடம் உள்ளார். கிட்டத்தட்ட சிவாஜி படத்தில் காட்டப்படும் சிவாஜி போல சின்ன ராஜ்ஜியத்தையே இவர் தனியாக நடத்தி வருகிறார். இவரின் Leuva Patel சமூகம்தான் மத்திய குஜராத், சவுராஷ்டிரா குஜராத்தில் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தி.
யார் இவர்?
இவரின் ஆதரவு இருந்தால் குஜராத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் வெற்றிபெறலாம். இவர் காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மிக்கு ஆதரவு தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான், இரண்டு பேருக்குமே அவர் ஆதரவு தரவில்லை. இவரை மத்திய அமைச்சராக்குகிறோம் என்று கூட பாஜக ஆபர் கொடுத்தும் பாஜக பக்கமும் இவர் செல்லவில்லை. காங்கிரஸ் கட்சியுடன்தான் இவர் நெருக்கமாக இருந்தார். பிரஷாந்த் கிஷோர் மூலம் இதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்தும் நரேஷ் பட்டேல் வைத்த கோரிக்கைகளை காங்கிரஸ் ஏற்காத காரணத்தால் அவர் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கவில்லை.
கிங் மேக்கர்
சரி கட்சிகளுக்கு ஆதரவு தரவில்லை. தனியாக தேர்தலில் போட்டியிடுவார் என்றாவது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிங் மேக்கரான இவர் கிங் ஆகவும் விருப்பம் இல்லை என்று கூறி தேர்தல் அரசியலில் நுழையாமல் வெளியேறினார். அதோடு இயக்கம் ஒன்றை தொடங்கி சமுக சேவை, இளைஞர்களுக்கு அரசியல் பாடம் எடுக்கும் முடிவையும் எடுத்துள்ளார். குஜராத் தேர்தல் முடிவுகளையே மாற்றும் சக்தி இருந்தும் இவர் குஜராத்தில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல் அமைதியாக இருந்தது பெரும் கவனத்தை ஈர்த்து உள்ளது... அரசியல்வாதிகள் எல்லாம் வீடு தேடி வந்தும்.. அதிகார ஆசையின்றி இவர் ஒதுங்கி நிற்பது பலரின் வரவேற்பை பெற்றுள்ளது.