பாலியல் பலாத்காரங்கள்- அகிலேஷ் ராஜினாமா செய்ய மகளிர் ஆணையம் கோரிக்கை
லக்னௌ: பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருவதை தடுக்க முயற்சிக்காத அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவத்திற்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாலியல் வழக்குகள் அதிகரித்து வருவதை தடுக்க உத்தர பிரதேச அரசு போதிய முயற்சிகளை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள தேசிய மகளிர் ஆணையம், முதல்வர் அகிலேஷ் யாதவ் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
"பதான் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆகியும் எதுவும் மாறவில்லை. அதன் பிறகு 7க்கும் அதிகமான பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன. பாலியல் வழக்குகளை தடுக்க எந்த முயற்சியும் உத்தர பிரதேச அரசு செய்யவில்லை. சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதால் முதல்வர் அகிலேஷ் யாதவ் பதவி விலக வேண்டும்.
காவல்துறை அதிகாரி மற்றும் அரசியல் தலைவர்கள் பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. 2014 ஆம் ஆண்டில் மட்டும் உத்தர பிரதேசத்தில் இருந்து 2,000 பாலியல் பலாத்கார புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்திற்கு வந்துள்ளன. இதில் 50 சதவீதம் காவல் துறையின் அக்கறையின்மை வழக்குகள்" என்றும் தேசிய மகளிர் ஆணைய தலைவர் மம்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.