சிறைகளைத் தாக்க மாவோயிஸ்டுகள் திட்டம்- 9 மாநிலங்களுக்கு மத்திய அரசு 'வார்னிங்'!
டெல்லி: நாட்டின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தங்களது இயக்க முக்கிய தலைவர்களை விடுவிக்க சிறைகள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று 9 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரித்துள்ளது.
அண்மையில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான முப்பல் லக்ஷமண ராவ் என்ற கணபதி மற்ற தலைவர்களுக்கு எழுதியுள்ள 17 பக்க கடித்ததை உளவு பிரிவினர் கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது.
அதில் கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். அத்தகைய தாக்குதலை போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடத்திட தயாராக இருக்க வேண்டும் என்று அக்கடிதத்தி்ல் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள 9 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாவோயிஸ்டு இயக்கத்தினர் எந்தவிதமான முறைகளையும் பின்பற்றி தங்களது தலைவர்களை விடுவி்க்க முனைவதால் மாநில அரசுகள் சிறைகளை பலப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.