அரியலூர் மாணவி சம்பவத்தில் காவல்துறை மீது குற்றம்சாட்டும் குழந்தைகள் ஆணையம்
அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தில் தற்கொலை செய்து கொண்ட 12ஆம் வகுப்பு மாணவியின் மரணம் குறித்த விசாரணையில் காவல்துறை முறைப்படி செயல்படவில்லையென தேசிய குழந்தைகள் நல ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
அரியலூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி உயிரிழந்தார். இவர் திருக்காட்டுப் பள்ளி மைக்கல்பட்டியில் உள்ள தூய இருதய ஆண்டவர் மேல் நிலைப் பள்ளியில் தங்கிப் படித்துவந்தார். அந்த மாணவி உயிரிழந்ததும், அவர் பேசும் வீடியோ ஒன்று வெளியானது.
அதில், தன்னை மதம் மாறச் சொல்லி தன் பெற்றோரிடம் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாக வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால், மதமாற்றம் குறித்த வலியுறுத்தலால்தான் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ, கல்வி ஆலோசகர் மதூலிகா சர்மா, சட்ட ஆலோசகர் கத்யயானி ஆனந்த் ஆகியோர் ஜனவரி மாதம் 30, 31ஆம் தேதிகளில் மாணவியின் கிராமத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் குழந்தைகள் நல ஆணையம் சில குற்றச்சாட்டுகளை காவல்துறை அதிகாரிகள் மீதும், கல்வித் துறை அதிகாரிகள் மீதும் முன்வைத்துள்ளது.
1. இந்தக் குழு பள்ளிக்கூடத்திற்குச் சென்றபோது மாணவிகள் தங்குவதற்கு என தனியான அறை ஏதும் இல்லை என்பதைக் கண்டறிந்தது. அந்த மாணவி தங்கியிருந்த அறை சுத்தம் செய்யப்பட்டிருந்தது. ஃபர்னிச்சர், புத்தகங்கள் போன்றவை ஏதும் அங்கே இல்லை. காவல்துறை விசாரணைக்காக அந்தப் பகுதிக்குள் யாரும் செல்வதைத் தடுத்து, பூட்டிவைக்கவில்லை. இதனால், ஏதேனும் ஆதாரங்கள் இருந்திருந்தால், அது சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என குழு கருதுகிறது.
- அரியலூர் மாணவி தற்கொலை, தேவாலயங்கள் மீது தாக்குதல்: பிபிசி கள ஆய்வில் புதிய தகவல்கள்
- அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் நடந்தது என்ன? முழு விவரம்
2. குற்றம்சாட்டப்பட்டவரை குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று எப்படி குற்றம் நிகழ்த்தப்பட்டது என்பதை நடித்துக் காட்டச் சொல்லவில்லை. மேலும், குற்றம்சாட்டப்பட்டவரை போலீஸ் காவலில் எடுக்கவும் இல்லை என விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
3. மாணவி அருந்திய விஷம் யாரிடமிருந்து வாங்கப்பட்டது என்பதை இதுவரை கண்டுபிடிக்கவில்லையெனவும் விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
4. விசாரணை அதிகாரியோடும் காவல்துறை கண்காணிப்பாளரோடும் உரையாடியதில், ஒரு மைனர் குழந்தை இறந்தால் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்னவோ அது பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்தது.
https://twitter.com/KanoongoPriyank/status/1499212010373869573
5. குழந்தைக்கு செவிலியரால் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காத நிலையிலும் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. அவருடைய பெற்றோர் வரும்வரை காத்திருந்தார்கள். குழந்தையை அழைத்துச் செல்வதற்கு முன்பாக, கட்டணமும் குழந்தையின் பெற்றோரிடமிருந்து பெறப்பட்டது. அது குறித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
6. குழந்தைக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததை வைத்துப் பார்க்கும்போது, குழந்தையின் மரணத்திற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணத்தை மறைக்கும் நோக்கம் வெளிப்படுகிறது.
7. குழந்தையை வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற வேண்டுமென பெற்றோர் கூறிய புகார் குறித்து அதிகாரிகள் விசாரிக்கவில்லை. தங்கியிருந்த இல்லத்தில் குழந்தை வேலைபார்க்க வைக்கப்பட்டது குறித்தும் விசாரிக்கப்படவில்லை.
8. பள்ளிக்கூடத்திற்கு அருகிலேயே குழந்தைகள் இல்லத்தை நடத்துவதற்கு முறையான அனுமதியை பள்ளிக்கூடம் பெறவில்லை.
9. இந்த மாணவிக்குப் பெற்றோரும் குடும்பமும் இருந்தும் சட்டவிரோதமாக அவர் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலக் குழுமத்தின் முன்பாக அவர் ஆஜர்படுத்தப்படவும் இல்லை.
10. அந்தக் குழந்தை தங்கவைக்கப்பட்டிருந்த விடுதியில் சட்டம் பரிந்துரைத்திருப்பதுபடியான வசதிகள் ஏதும் இல்லை. ஆலோசகரோ, குழந்தைகள் நல அலுவலரோ அங்கு இல்லை.
https://twitter.com/KanoongoPriyank/status/1499268941666930689
11. நூலகம், காத்திருப்போர் அறை, சாப்பாட்டு அறை போன்றவை ஏதும் இல்லை. யாருக்கும் தனி அறை இல்லை. ஒரே ஒரு ஹால் மட்டுமே இருக்கிறது. ஏசி, தண்ணீர் சூடாக்கும் கருவி ஏதும் இல்லை. சிசிடிவி கேமரா இல்லை.
12. அவசர மருத்துவ வசதி சாதனங்கள் ஏதும் இல்லை. குழந்தைகளை அங்கே சேர்க்கும்போது சோதனை ஏதும் நடத்தப்படுவதில்லை. குழந்தை பாதுகாப்புக் கொள்கை ஏதும் எழுதிவைக்கப்படவில்லை.
13. எங்கிருந்து பணம் வருகிறது என்பது குறித்த ஆவணங்கள் ஏதும் இல்லை. குழந்தைகளின் முன்னேற்ற அறிக்கை ஏதும் அங்கே இல்லை.
இப்படிப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள ஆணையம், பின்வரும் பரிந்துரைகளைச் செய்துள்ளது.
1. அந்த விடுதிக்கு பதிவு ஏதும் இல்லாமல் இயங்க அனுமதித்த மாவட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. உயிரிழந்த குழந்தையின் பெற்றோர், சகோதரருக்கு போதுமான ஆலோசனைகளையும் இழப்பீட்டையும் வழங்க வேண்டும்.
3. அந்த விடுதியில் தற்போது தங்கியுள்ள அனைத்துக் குழந்தைகளையும் வேறு இடத்திற்கு மாற்ர வேண்டும்.
4. இந்த விவகாரத்தில் முறைப்படி, நியாயமான விசாரணையை நடத்தாத காவல்துறை அதிகாரிகள் மீது காவல்துறைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதமாற்றத்திற்கு வலியுறுத்தியதாலேயே அரியலூர் மாணவி உயிரிழந்ததாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டிய நிலையில், அது குறித்து நேரடியாக எந்தக் கருத்தையும் தனது அறிக்கையில் ஆணையம் தெரிவிக்கவில்லை. மதமாற்றத்தால் குழந்தை இறந்தது என பெற்றோர் கூறிய புகாரை விசாரிக்கவில்லையென்று மட்டும் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனின் எதிர்காலம் என்ன?
- யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி: நாடகத்தில் அதிபரானவர், நாட்டில் அதிபரான கதை
- யுக்ரேன் தலைநகர் கீயவ் தெருக்களில் கடும் சண்டை: வெடிகுண்டு சத்தம் - நேரலை செய்தி
- யுக்ரேனில் ரஷ்யாவின் நுழைவு குறித்து ரஷ்யர்களின் மனநிலை என்ன?
- யுக்ரேன்: ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் என்ன? சர்வதேச உறவுகளில் தடைகளின் பொருள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்