என்டிடிவி தடைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்.. எமர்ஜென்சி நிலை என மம்தா சாடல் #NDTVbanned
கொல்கத்தா: பதன்கோட் தீவிரவாத தாக்குதல் செய்தியை வழங்கியதில் பாதுகாப்பு அம்சங்களை மீறிவிட்டதாக கூறி, 'என்டிடிவி இந்தியா' ஹிந்தி சேனலுக்கு 24 மணிநேர தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 9ம் தேதி 1 மணி முதல் மறுநாள் 1 மணிவரை ஒளிபரப்பு தடை செய்யப்பட உள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில், இந்த தடை அதிர்ச்சியாக உள்ளது. பதன்கோட் பிரச்சினையை டீல் செய்ய அரசுக்கு வேறு மார்க்கங்கள் உள்ளன. சேனலை தடை செய்வது என்பது, எமர்ஜென்சி நிலையை நினைவுபடுத்துகிறது என்றார்.
இந்திராகாந்தி காலத்தில்தான் எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டு பல பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே என்டிடிவி விஷயத்தில் கருத்து கூறிய ராகுல்காந்தி எமர்ஜென்சி வார்த்தையை தவிர்த்துவிட்டார். அவர் கூறுகையில், இது நடைமுறைக்கு முரணான தடை, இது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.
எடிட்டர் கில்ட் அமைப்பும், மத்திய அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.