டுபாக்கூர் நிறுவன பெயரைச் சொல்லி கோடிக்கணக்கில் சுருட்டிய 4 பேர் பெங்களூரில் கைது
பெங்களூர்: போலி நெட்வொர்க்கிங் நிறுவனத்தில் உறுப்பினராக்குகிறோம் என்று கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்த நியூசிலாந்தைச் சேர்ந்த பெண் உள்பட 4 பேர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒய்ஓபிஎஸ்என் சோஷியல் மீடியா நெட்வொர்க் எம்.எல்.எம். என்ற போலி இணையதள நிறுவனம் www.socialmediatechnologies.com என்ற இணையதளம் மூலம் செயல்படுவதாகவும், அது அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் என்றும் கூறி சிலர் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதாக பெங்களூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பெங்களூர் ராஜ்பவன் சாலையில் உள்ள ஹோட்டல் கேபிடலுக்கு சென்றனர்.

அங்கு நிறுவனத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட நியூசிலாந்தைச் சேர்ந்த டெனிஸ்(52), அவரது உதவியாளர்களான பெங்களூரைச் சேர்ந்த முகமது குர்ரம்(44), கிரண் மோடி(39) மற்றும் ஹிதேஷ் மோடி(42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
அந்த 4 பேரும் தங்கள் நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேருமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்கள் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கூட்டம் நடத்தி மக்களை ஏமாற்றியுள்ளனர். அவர்களின் நிறுவனத்தில் உறுப்பினராக சேர ரூ. 8 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அளிக்க வேண்டும். அது மட்டும் இன்றி உறுப்பினராக சேர்வோர் நிறுவனத்தில் முதலீடு செய்ய இரண்டு பேரை அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் உறுப்பினருக்கு 25 சதவீதம் போனஸ் கிடைக்கும்.
டெனிஸ் இதுவரை உலக அளவில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை நிறுவனத்தில் சேர்த்துள்ளார். அவர் புதிய உறுப்பினர்களிடம் இருந்து ரூ.50 கோடி வசூல் செய்துள்ளார் என்றனர்.












Click it and Unblock the Notifications