ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்.. இவர்களை மோடி தேர்வு செய்யாதது ஏன்?
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதிக்கான தேர்வில் இவர்களின் பெயர்கள் இடம்பெறாதது ஏன்?
டெல்லி: ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுப் பட்டியலில் சிலருடைய பெயர்கள் இடம்பெறாதது ஏன் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகியுள்ளன.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த ஜனாதிபதிக்கான வேட்பாளரை நிறுத்துவதில் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன. அதே வேளை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி மாளிகையை அலங்கரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இதனால் வேட்பாளர் தேர்வுக்கான போட்டி வலுத்து வருகிறது.
பாஜகவை பொருத்தவரை அனைத்து கட்சியினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ரஜினிகாந்தின் பெயரை பரிந்துரைக்க திட்டமிட்டது. எனினும் ரஜினிக்கு அரசியலில் ஈடுபாடு இல்லாததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
பெயர் பட்டியலில்
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்தலில் பெயர் பட்டியல் தயாரிக்கும் பலரது பெயர்கள் அடிபட்டுள்ளன. எனினும் ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்முவின் பெயர்தான் அதிகமாக அடிபடுகிறதாம். ஒரு வேளை அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமை கிடைக்கும்.
மோடி தேர்ந்தெடுத்திருக்கலாம்
ஜனாதிபதி வேட்பாளர்களாக பிரணாப் முகர்ஜி, எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அமிதாப் பச்சன், நஜ்மா ஹெப்துல்லா, சுஷ்மா ஸ்வராஜ், மோகன் பகவத் ஆகியோரின் பெயர்கள் பலமாக அடிப்பட்டதாம். மோடி இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் ஏன் செய்யவில்லை என்பதற்கான காரணங்கள் தற்போது அலசப்பட்டு வருகின்றன.
மோகன் பாகவத்
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவரான மோகன் பாகவத், தான் ஜனாதிபதிக்கான போட்டியில் இல்லை என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டார். அதேவேளையில் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் என்ற சர்ச்சையிலிருந்து விலக மோடியும் இவரை தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. மேலும் ஜனாதிபதி மாளிகைக்கு செல்பவர் தனது பேச்சை கேட்பவராக இருக்க வேண்டும் என்பதிலும் மோடி உறுதியாக உள்ளார்.
நஜ்மா ஹெப்துல்லா
மணிப்பூர் மாநில ஆளுநராக உள்ள இவருக்கு ஜனாதிபதியாக விருப்பம் உண்டு. அதை கடந்த 2016-இல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிடம் தெரிவித்துவிட்டார். இவர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவுக்கு வந்ததே இந்தக் காரணத்திற்காகத்தான்.
பிரணாப் மற்றும் அமிதாப்
தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் மத்திய அரசுக்கு இணக்கமாகவே இருந்தார். எனினும் தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரை் ஜனாதிபதியாக வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பமாகும். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த ஒருமித்த கருத்து நிலவியது. எனினும் பனாமா வரி ஏய்ப்பு பெயர் பட்டியலில் அவரது பெயர் வெளியானதால் அந்த முடிவு கைவிடப்பட்டது.
மூத்த தலைவர்கள்
பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கோவா மாநாட்டில் ஜோஷி கடுமையாக எதிர்த்ததை மோடி இன்னும் மறக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் இவர்களின் பெயர்களும் பரிந்துரைக்கப்படவில்லை.