பதன்கோட் தாக்குதலில் தொடர்பா? போலீஸ் எஸ்.பி.க்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டம்
சண்டிகர்: பஞ்சாப் மாநில போலீஸ் எஸ்.பியான, சல்விந்தர் சிங் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் சந்தேகம் இருப்பதால் அவருக்கு பாலிகிராப் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தேசிய பாதுகாப்பு ஏஜென்சி (என்.ஐ.ஏ) அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானதளத்தில் தீவிரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர். 4 நாட்கள் வரை நீடித்த சண்டை 7 ராணுவ வீரர்கள் வீர மரணம், மற்றும் 6 தீவிரவாதிகளின் சாவோடு முடிவுக்கு வந்தது.

தீவிரவாதிகள், சம்பவத்தன்று காலையில், பஞ்சாப் மாநிலத்தின், குருதாஸ்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி சல்விந்தர் சிங் பயணித்த காரை மறித்து, அவரை கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அவரை விட்டுவிட்டனர்.
இந்த கடத்தலுக்கும், பதன்கோட் தாக்குதலுக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் வலுத்துள்ளது. எஸ்.பியுடன் காரில் பயணித்தோரும், எஸ்.பியும், மாறுபட்ட வாக்குமூலங்களை அளித்துள்ளனர். எனவே சல்விந்தர் சிங்கிற்கு பாலிகிராப் எனப்படும் ஒருவகை உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பதன்கோட் விமானதளத்திலுள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும், என்.ஐ.ஏ அதிகாரி ஒருவர் 'ஒன்இந்தியாவிடம்' தெரிவித்தார்.
பொதுவாக உண்மை கண்டறியும் சோதனைகள் இரு வகைகளில் நடைபெறுகிறது. ஊசி மூலம் தன் வயமிழக்கும் மருந்தை சந்தேகப்படும் நபர் உடலில் ஏற்றி, உண்மையை வெளியே கொண்டுவருவது ஒரு வகையெனில், தலையில், வயர்களை இணைத்து, கம்ப்யூட்டருடன் அதை இணைத்து, செய்யப்படுவது பாலிகிராப் சோதனையாகும்.












Click it and Unblock the Notifications