நிடோ மரணம்: ராகுலை அடுத்து மாணவர்களுடன் சேர்ந்து கெஜ்ரிவால் தர்ணா
டெல்லி: டெல்லியில் அடித்துக் கொல்லப்பட்ட அருணாச்சல பிரதேச மாணவர் நிடோ தனியமின் மரணத்தை கண்டித்து போராடும் வடகிழக்கு மாணவர்களுடன் சேர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த நிடோ தனியம்(20) என்ற மாணவர் கடந்த வாரம் டெல்லியில் உள்ள மார்க்கெட் பகுதியில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். இதையடுத்து அவர் மரணம் அடைந்தார்.

அவரது மரணத்தை கண்டித்து டெல்லியில் படிக்கும் இந்தியாவின் வடகிழக்கு பகுதி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று சந்தித்து நிடோ மரணத்திற்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்வதாக உறுதி அளித்தார்.
மாணவர்களிடம் அவர் கூறுகையில், நிடோவுக்கு நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரேயொரு இந்தியா தான் உள்ளது. அந்த இந்தியா நம் அனைவருக்கும் சொந்தம். இந்த நாட்டில் உங்களுக்கு மரியாதை கிடைக்க செய்வோம் என்றார்.
இந்நிலையில் நியாயம் கேட்டு போராடும் மாணவர்களுடன் சேர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் ஜெக்ரிவால் ஜந்தர் மந்தரில் நடந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் படித்த நிடோ விடுமுறையை தனது சகோதரியின் வீட்டில் கழிக்க டெல்லி வந்தார். அப்போது மார்க்கெட் பகுதிக்கு சென்ற அவரின் தோற்றம் மற்றும் டை அடித்த முடியை பார்த்து சில கடைக்காரர்கள் கிண்டலடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்து தகராறு செய்த நிடோவை அவர்கள் கட்டைகளால் அடித்தனர். அதன் பிறகு வீட்டுக்கு சென்றவர் மறுநாள் காலை பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications