பாஜகவுக்கு எதிரான கூட்டணியை வலுப்படுத்தவே ராகுலுடன் சந்திப்பு: நிதிஷ்குமார்
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிரான கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை தாம் சந்தித்ததாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த மெகா கூட்டணிக்காக நிதிஷ், லாலு ஆகியோர் மும்முரமாக முயற்சித்து வருகின்றனர். இதில் நிதிஷ்- லாலு கட்சிகளிடையே இணக்கம் ஏற்பட்டு நிதிஷ்குமாரையே முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்துவிட்டனர்.
முன்னதாக ராகுல்காந்தியையும் நிதிஷ்குமார் ஞாயிற்றுக்கிழமையன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பு குறித்து நிதிஷ்குமார் கூறியதாவது:
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஞாயிற்றுக்கிழமையன்று சந்தித்துப் பேசினேன். பீகார் சட்டசபை தேர்தலுக்காக ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்திக்க மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக சந்தித்தேன்.
காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல.. மதச்சார்பற்ற அத்தனை கட்சிகளும் இந்த மெகா கூட்டணியில் இணைந்து வலுப்படுத்த வேண்டும். ராகுல் காந்தியை இப்போதுதான் முதல் முறையாக சந்திக்கவும் இல்லை.. இதற்கு முன்னரும் நான் ராகுலை சந்தித்து பேசியும் இருக்கிறேன்.
இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.