கொலை வழக்கில் சிக்கிய நிதிஷ்குமாரை நாங்கள் கண்டுகொள்ளாமல் சும்மாதானே இருந்தோம்.. சீறும் லாலு பிரசாத்
பாட்னா: தனது மகன் தேஜஸ்வியை துணை முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு நிதிஷ்குமார் கேட்கவேயில்லை என்றும், பாஜகவோடு கூட்டணி அமைக்க அவர் பொய் சொல்வதாகவும், ராஷ்டிரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
2006ம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ரயில்வே ஓட்டல்களை வாடகைக்கு விட்டதில் பல கோடிக்கு மோசடி செய்திருப்பதாக கூறி கடந்த மாதம் சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தேஜஸ்வி பெயரும் இடம் பெற்றுள்ளது.
இது நிதிஷ் குமாருக்கு கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க அவர் தேஜஸ்விக்கு உத்தரவிட்டார். ஆனால் லாலு பிரசாத் குடும்பத்தினர் அதை கண்டு கொள்ளவில்லை.
நிதிஷ் ராஜினாமா
இந்த நிலையில், தேஜஸ்வியை பதவியை விட்டு விலக நிதிஷ் வலியுறுத்தியதாகவும், அவர் மறுத்ததால்தான் தனது முதல்வர் பதவியை நிதிஷ் ராஜினாமா செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
சந்தர்ப்பவாதம்
இதுகுறித்து லாலு பிரசாத் யாதவ் இன்று இரவு 7.50 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஊழல் புகார் குறித்து எங்களிடம் நிதிஷ் விளக்கம்தான் கேட்டாரே தவிர தேஜஸ்வியை ராஜினாமா செய்ய கூறவில்லை. ஆனால் இப்போது பொய் கூறிவிட்டு பாஜகவோடு கை கோர்க்க முயல்வது முழு சந்தர்ப்பவாதம்.
கொலை வழக்கு
செத்தாலும் சாவேனே தவிர, பாஜகவோடு கூட்டணி வைக்க மாட்டேன் என கூறியவர்தான் நிதிஷ். கொலை மற்றும் ஆயுத வழக்கில் சிக்கியுள்ள ஒரே முதல்வர் நிதிஷ்குமார்தான். அது எங்களுக்கும் தெரியும். நாங்கள் அதை பெரிதுபடுத்தவில்லை. இப்போது பாஜக, ஆர்எஸ்எஸ்சுடன் நிதீஷ் கூட்டு வைத்துக்கொண்டுள்ளார்.
இவ்வாறு லாலு தெரிவித்தார்.
மோதல்
நிதிஷ் மீது பதியப்பட்ட பழைய கொலை வழக்கு ஒன்றை சுட்டிக்காட்டி கோபத்தை கொட்டியுள்ளார் லாலு. தேஜஸ்வியை ஊழல்வாதி என நிதிஷ் கூறியதற்கு லாலு இப்படி பதிலடி கொடுத்துள்ளார். இதனால் பீகார் அரசியலில் மோதல் முற்றியுள்ளது.