ஆட்டோ மீது காரை விட்டு மோதிய இந்தியா 19 கேப்டன்.. பொதுமக்கள் தர்ம அடி.. பாட்னாவில்!
பாட்னா: 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டன் இஷான் கிஷன், பாட்னாவில் அதி வேகமாக காரை ஓட்டி ஆட்டோ மீது மோதி விட்டார். இதையடுத்து அவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இருப்பினும் இந்த விவகாரம் சுமூகமாக பேசித் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், கிஷன் கைது செய்யப்படவில்லை என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.
இந்த விபத்தில் பலர் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிஷன் ஓட்டி வந்தது அவரது தந்தையின் காராகும். படு வேகமாக வந்துள்ளார். வந்த வேகத்தில் ஒரு ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளாக்கினார். இதில் ஆட்டோவில் சென்றவர்களும் சாலையில் சென்ற சிலரும் காயமடைந்தனர்.
இ்நத சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காரை ஓட்டிவந்த கிஷனை சரமாரியாக அடித்து துவைத்து விட்டனர். தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து அவரை மீட்டனர். விசாரணையில்தான் கிஷன் இந்தியா 19 கேப்டன் என்று தெரிய வந்தது.
ஐசிசி 19 உலகக் கோப்பைப் போட்டியில் இவரது தலைமையில்தான் இந்தியா பங்கேற்கவுள்ளது. வங்கதேசத்தில் இந்தப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்தான் இந்த அணியின் பயிற்சியாளர். இப்படிப்பட்ட நிலையில் விபத்தை ஏற்படுத்தி விட்டார் கிஷன்.
இந்த நிலையில் கிஷன் கைது செய்யப்பட்டதாக முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால் பாட்னா போலீஸார் இதை மறுத்துள்ளனர். கிஷன் கைது செய்யப்படவில்லை என்றும், இந்த விவகாரம் சுமூகமாக பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.
காவல் நிலையத்தில் வைத்து இரு தரப்பையும் வைத்து போலீஸாரே பஞ்சாயத்து பேசி முடித்து விட்டதாக கூறப்படுகிறது. என்ன மாதிரியான தீர்வு காணப்பட்டது என்பதை போலீஸார் சொல்லவில்லை.